ரஷியா - உக்ரைன் போர் 26 வது நாளாக நீடித்து வரும் நிலையில், “ரஷ்யா செய்வது போர் இல்லை, பயங்கராவதம்” என்று, புடினை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மிக கடுமையகா விமர்சித்து உள்ளார்.

ரஷியா - உக்ரைன் இடையேயான போர் 26 வது நாளாக இன்று தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்யா, தனது பலத்தை ஒட்டுமொத்தமாக திரட்டி, தொடர்ச்சியாக உக்ரைனை மிக கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.

உக்ரைன் நாட்டில் உள்ள மரியுபோல் நகரானது, முற்றிலுமாக சேதம் அடைந்து ஒரு நரகம் போல் காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது.

இதனால், உக்ரைன் நாட்டின் கிழக்கு துறைமுக நகரமான மரியுபோலில், “உக்ரைன் படைகள் சரணடைய வேண்டும்” என்று, ரஷ்யா எச்சரிக்கை வடுத்து உள்ளது. 

இதற்கு பதிலடியாக, உக்ரைன் ராணுவமும் “உங்கள் ஆயுதங்களை நீங்கள் கீழே போடுங்கள்” என்று, கூறியுள்ளது. இதனால், அங்கு நடைபெற்று வந்த தாக்குதலானது, இன்னும் தீவிர தாக்குதலாக மாறி உள்ளது. 

இதன் காரணமாக, மரியுபோல் நகர் எங்கிலும் தீ பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இதனால், இந்த போரில் உக்ரைன் நாட்டில் எதிர்பாரத அளவில் மிகப் பெரிய பாதிப்புக்களும், இழப்புகள் நிகழ்ந்து உள்ளன.

இந்த நிலையில் தான், இது குறித்து பேசிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, “உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் என்பது போர் அல்ல என்றும், இது ஒரு பயங்கரவாதம்” என்றும், மிக கடுமையாக எச்சரித்து உள்ளார். 

“நாங்கள் புடினுடன் பேச்சு வார்த்தை நடத்தி இந்த பயங்கவரவாதத்தை நிறுத்த தயாராக இருக்கிறோம்” என்றும், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி
மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். 

குறிப்பாக, “புடின் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை என்றால், இது 3 ஆம் உலக போருக்கு வழி வகுக்கும்” என்றும், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஆனால், ரஷ்ய ராணுவமானது கிழக்கு உக்ரைனுக்குள் மேலும் 12 கிலோ மீட்டர் தூரம் முன்னேறி, மரியுபோல் அருகே உள்ள நிகோல்ஸ்கே  எல்லையை அடைந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 

இது தொடர்பாக உக்ரைன் தரப்பிலிருந்து எந்த உறுதியான தகவலும் வெளியிடப்படவில்லை.

அத்துடன், “ரஷ்யா விவகாரத்தில் நடுநிலையை கைவிட்டு எங்கள் நாட்டை ஆதரிக்க வேண்டும்” என்று, இஸ்ரேலுக்கு, உக்ரைன் கோரிக்கை விடுத்து உள்ளது. 

இதனிடையே, “உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரில் இது வரை 34 லட்சம் மக்களை அகதிகளாக அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, பெலாரஸ், சுலோவேகியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.