நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திரையுலகை சேர்ந்தவர்களும் தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் இந்த வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 55 லட்சத்து 62 ஆயிரத்து 664 ஆக உள்ளது. 9 லட்சத்து 75 ஆயிரத்து 861 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 88 ஆயிரத்து 935 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்றுக்குப் பிரபலங்களும் பாதித்து வருகின்றனர். அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், நடிகர் விஷால், எஸ்.எஸ்.ராஜமவுலி, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜுன், சுமலதா, அர்ஜுன் கபூர், மலைகா அரோரா உள்பட பல பிரபலங்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பிரபல இந்தி நடிகையான ஜரினா வஹாப்புக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர், தமிழில் எம்.ஜி.ஆர் நடித்து கடந்த 1977=ம் ஆண்டு வெளியான நவரத்தினம் படத்தில் நடித்துள்ளார். ஜெய்சங்கருடன் கைவரிசை என்ற படத்திலும் நடித்துள்ளார். பல மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ள இவர், தயாரிப்பாளரும் நடிகருமான அதித்யா பஞ்சோலியின் மனைவி. வெகு நாட்களுக்கு பிறகு கமல் ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் நடித்திருந்தார். 

இவர்கள் மகன் சூரஜ் பஞ்சோலியும் மகள் சனாவும் இந்தி படங்களில் நடித்து வருகின்றனர். நடிகை ஜரினா வஹாப்புக்கு திடீரென மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மும்பை லீலாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆக்ஸிஜன் அளவும் குறைவாக இருந்ததால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடல் நிலை குணமானதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.

சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா உயிர் இழந்தார். தெலுங்கு திரையுலகில் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தார்கள். 

தற்போது சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான நாகபாபுவுக்கும், இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவுக்கும், ராமராஜனுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சனை எப்பொழுது தீரும், இந்த 2020ம் ஆண்டு எப்பொழுது முடியும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸால் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் வாழ்வாதாரங்களை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கை தகர்த்தாலும், இந்த வைரஸ் முற்றிலும் இல்லாமல் இருந்தால் தான் மக்களுக்கு இயல்பு நிலை.