தமிழ் சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்களான தளபதி விஜய் மற்றும் அஜித் குமாரின் வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் பொங்கல் வெளியீடாக நேற்று ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. வழக்கத்தை விட இந்த முறை இரண்டு திரைப்படங்களுக்குமான கொண்டாட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கின்றன.
2014 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து இரண்டு நட்சத்திரங்களின் திரைப்படங்களும் பொங்கல் வெளியீடாக ரிலீஸாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் குமார் உடன் இணைந்துள்ள H.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படமும், முதல் முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி, தளபதி விஜய் அவர்களுடன் இணைந்துள்ள வாரிசு திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
முன்னதாக இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு நள்ளிரவு ஒரு மணி காட்சிகள் இந்த முறை பொங்கல் வெளியீடிற்கு ரசிகர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. இதனிடையே கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு பொங்கல் விடுமுறைகளை ஒட்டி வருகிற 13 முதல் 18ஆம் தேதி வரை துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கான அதிகாலை காட்சிகளை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்ததன் பலனாக வருகிற 13-ம் தேதி முதல் 18ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள அதிகாலை காட்சிகள் வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென அனுமதி மறுக்கப்பட்டதால் மிகுந்த வருத்தத்தில் இருந்த ரசிகர்கள் தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மிகுந்த உற்சாகம் கொண்டிருக்கிறார்கள்.