தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கோப்ரா. சீயான் விக்ரம் பல அட்டகாசமான கெட்டப்புகளில் நடித்த கோப்ரா திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தற்போது இயக்கி வருகிறார்.

முன்னதாக தனது முதல் திரைப்படமாக இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் த்ரில்லர் படமாக வெளிவந்த டிமான்டி காலனி திரைப்படம் நடிகர் அருள்நிதிவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்தது. ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்ற டிமான்டி காலனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது டிமான்டி காலனி திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது.

ஹாலிவுட்டின் ஹாரர் திரில்லர் திரைப்படங்களான தி கான்ஜுரிங் சீரிஸ் படங்களின் பாணியில் டிமான்டி காலனி படத்தின் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் அருள்நிதியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். தீபக்.D.மேனன் ஒளிப்பதிவில் குமரேசன்.D படத்தொகுப்பு செய்யும் டிமான்டி காலனி 2 படத்திற்கு சாம்.CS இசையமைக்கிறார்.

அஜய் ஞானமுத்துவின் ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் பிரபல சீரியல் நடிகை VJஅர்ச்சனா இணைந்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியின் ஃபேவரட் சீரியல்களில் ஒன்றான ராஜா ராணி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை VJஅர்ச்சனா தற்போது வெள்ளித்திரையிலும் ஜொலிக்க இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் களமிறங்கியிருக்கிறார். இதனை VJஅர்ச்சனா நமது கலாட்டா தமிழுக்கு EXCLUSIVE-வாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.