அடுத்த ஆண்டு(2023) பொங்கல் தமிழகத்தின் திரையரங்குகளை பொறுத்த வரை தீபாவளியாக மாறப்போகிறது. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான தளபதி விஜய் மற்றும் அஜித் குமாரின், வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு காத்திருக்கின்றனர்.

குறிப்பாக தளபதி விஜய் ரசிகர்களுக்கு வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு இன்னும் பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. முன்பே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தபடி வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுடன் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவரவுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை நடைபெற்றது. தளபதி விஜய் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்சன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நமது கலாட்டா டிஜிட்டல் ஸ்டார்ஸ் 2022 விருது விழாவில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான் அவர்கள் தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இது குறித்து பேசி அவர், “லோகேஷ் சார் படத்தில் ஒரு பெரிய வேடம் என சொல்லியிருக்கிறார்கள்…” என தெரிவித்தார். தொடர்ந்து தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து நடிப்பது குறித்து கேட்டபோது, “தளபதியுடன் முன்பே நான்… அவருடைய முதல் படத்திலேயே நான் தான் வில்லன். அவருடன் 10 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன் என நினைக்கிறேன். இடையில் கொஞ்சம் நடிக்க முடியாமல் போய்விட்டது. தற்போது மீண்டும் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார். மன்சூர் அலி கானின் ட்ரெண்டாகும் அந்த பேட்டி இதோ…