தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மன் என்கிற பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

முன்னதாக இயக்குனர் N.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நடிகர் ஜெயம் ரவி தனது திரைப்பயணத்தில் தற்போது 19 வருடங்களை நிறைவு செய்துள்ளார். 19 வருடங்களாக கதாநாயகனாக தனது வெற்றிப்பயணத்தை தொடர்ந்து வரும் நடிகர் ஜெயம்ரவிக்கு ரசிகர்களும் திரை உலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தனது 19 வருட திரைப்பயணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 

எல்லாம் நேற்று தான் நடந்தது போல் தெரிகிறது! என் முதல் படமான 'ஜெயம்' படத்துக்காக முதல்முறையாக கேமராவை எதிர்கொண்ட நினைவு இன்னும் என் நினைவில் இருக்கிறது. இன்று, நான் 19 வருடங்களை நிறைவு செய்துள்ளேன். இது ஒரு மேஜிக் போல் தெரிகிறது. இந்தப் திரைப்பயணத்தின் பின்னணியில் படைப்பாளிகள் மற்றும் வித்தகர்கள் பலர் உள்ளனர். நான் ஒரு வெறும் நடிகன், அவர்களின் பார்வையை திரையில் மொழிபெயர்த்த ஒரு ஊடகம் மட்டுமே. எனது திறமை மற்றும் ஆர்வத்திற்கு முழு ஆதரவாக எனது தந்தை இருந்துள்ளார். ஒரு நடிகராக இருப்பதற்கான எனது திறனை நான் சுயமாக உணரும் முன்பே எனக்கு அவர் அடையாளம் காட்டினார். உணர்வுபூர்வமான தருணங்களில் ஆதரவாக இருந்த என் அம்மாதான் என் வளர்ச்சியின் முதுகெலும்பு. எனது மூத்த சகோதரர் ராஜா எப்போதும் ஒரு வெற்றிகரமான நடிகராக என்னை கற்பனை செய்து. அவரது முத்திரை கையால் என்னை நட்சத்திரமாக மிளிரச் செய்தார். என்னுடைய முதல் விமர்சகரும் நண்பருமான என் மனைவி ஆர்த்திக்கு நன்றி. எனது உத்வேகத்தின் ஆதாரமாக இருந்த திரைத்துறையில் உள்ள எனது மூத்த நடிகர்களுக்கு நன்றி. அவர்களின் இடைவிடாத ஆற்றல், தீராத ஆர்வம் மற்றும் அவர்களின் தொழிலின் மீதான முழுமையான அர்ப்பணிப்பு ஆகியவை தான் என்னை மிகவும் உந்துதலாக வைத்திருக்கின்றன. ஒவ்வொரு படத்திலும் நான் பெரிய உயரத்தை எட்டிப்பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக விரும்பிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நடிகர்கள். தொழில்துறை நண்பர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி. எனது சிறந்த படைப்புகளை பாராட்டத் தவறாத, அதே நேரத்தில், அவர்களின் நேர்மறையான விமர்சனங்களால் எனது வாழ்க்கையை மேம்படுத்த உதவிய பத்திரிகை-ஊடகச் சகோதரர்கள் மற்றும் சமூக ஊடகத் துறையில் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்பும் ஆதரவும் எனது திறமையை வளர்த்ததோடு மட்டுமல்லாமல், சிறந்த படைப்புகளை வழங்குவதற்கு நிறைய பொறுப்புகளை என்னுள் விதைத்துள்ளது. 
என்றென்றும் பேரன்புடன்
உங்கள்
ஜெயம் ரவி

என தெரிவித்துள்ளார். ஜெயம்ரவியின் அந்த அறிக்கை இதோ…
 

#19YearsOfJayamravi 🙏🏼 pic.twitter.com/Obp9xerd89

— Jayam Ravi (@actor_jayamravi) June 21, 2022