சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இரண்டு பாகங்களாக தயாராகியிருக்கும் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தின் 2-வது பாகம் அடுத்த 6-9 மாதங்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களாக விளங்கும் ஆதித்த கரிகாலனாக சீயான் விக்ரம், அருண்மொழி வர்மன் எனும் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வல்லவரையன் வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி மற்றும் மந்தாகினி என இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், பெரிய மற்றும் சிறிய பழுவேட்டரையர்களாக சரத்குமார் மற்றும் பார்த்திபன், சுந்தரசோழராக பிரகாஷ்ராஜ், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரியாக இளைய திலகம் பிரபு, பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு, மதுராந்தகராக ரஹ்மான், பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து அமரர் கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி தயாராகியிருக்கும் இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளன. தோழர் ஜெயமோகன் அவர்களின் வசனத்தில் தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தனது கதாபாத்திரமான ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் குறித்து மனம் திறந்து சீயான் விக்ரம் பேசிய புதிய வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இதோ…