ஆண் நண்பனுடன் சினிமாவுக்கு சென்ற பெண் டாக்டரை, ஷேர் ஆட்டோ என்று கூறி, கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் வேலூரில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

வேலூரில் உள்ள சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரில் நேற்று முன் தினம் இரவு நேரத்தில், இரு இளைஞர்கள் கடும் போதையில் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டு இருந்துள்ளனர்.

அந்த நேரம் பார்த்து, அந்த வழியாக சென்ற சத்துவாச்சாரி போலீசார், போதையில் தாக்கிக்கொண்ட அந்த இரு இளைஞர்களையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, போதையில் இருந்த அந்த 2 பேரும், “பொது மக்களிடம் வழிப்பறி செய்து கொள்ளையடித்த பணத்தை பங்கிட்டுக் கொள்வதில் ஏற்பட்ட தகராறு தான்” என்பதை போலீசார் கண்டுப்பிடித்தனர். 

இதனையடுத்து, அந்த பேரையுமே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்கு வைத்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த விசாரணையில், “இவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, வேலூர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வரும் பெண் டாக்டர் ஒருவரை, இவர்களும் இவர்களது கூட்டாளிகளும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது” தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், இவர்களை தங்களது பாணியில் மேற்கொண்டு விசாரிக்க தொடங்கி உள்ளனர்.

அப்போது, “பெண் டாக்டர் ஒருவர், தனது ஆண் நண்பரும் கடந்த 16 ஆம் தேதி அன்று இரவு காட்பாடியில் இருக்கும் ஒரு திரையரங்கில் இரவு காட்சி பார்த்துவிட்டு, நள்ளிரவு ஒரு மணிக்கு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் ஏறி இருக்கிறார்கள்.

அப்போது, அந்த ஆட்டோ போகும் வழியில் மருத்துவமனையை நோக்கி செல்லாமல், அங்கிருந்து திசைமாறி வேறு எங்கையோ சென்றிருக்கிறது.

இதனால், பதற்றமான அந்த பெண் கேள்வி கேட்ட போது, “பாதை சரியில்லை” என்று, அவர்கள் காரணத்தை கூறிவிட்டு, “அங்கிருந்து வேறு பாதையில் செல்கிறோம்” என்று கூறிவிட்டு, அந்த ஆட்டோவில் வந்த 5 பேரும் அந்த ஆண் நண்பரை கடுமையாக தாக்கிவிட்டு, அந்த பெண் மருத்துவரை கடத்திச் சென்று அவர்கள் அனைவரும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

மேலும், அந்த பெண் டாக்டர் பயன்படுத்திய செல்போன்கள், 40 ஆயிரம் ரூபாய் பணம், 2 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றையும் மிரட்டி அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.”

இதனையடுத்து, பறித்துக்கொண்ட இந்த பணத்தை பங்கு போடும் போதுதான் போலீசாரிடம் இவர்கள் சந்தேகத்தின் பேரில் சிக்கி, காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதனை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், சம்மந்தப்பட்ட பெண் டாக்டரிடம், புகாரைப் பெற்றுக்கொண்டு, அவர்கள் இருவருவரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மற்ற 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைதாகி உள்ள 5 பேரில், 4 பேர் 18 வயதுக்கு உட்பட சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலியல் பலாத்காரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலீசார் அடுத்தக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.