திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற காலம் காலமாக சொல்லப்பட்ட பொய்யை இன்று சுக்குநூறாக உடைத்திருக்கிறோம் என்று உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

voter

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பல்வேறு கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று பரப்புரையில் ஈடுபட்டார்.

அந்த பரப்புரையில் முக ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் ஆகியுள்ளது. திமுக அரசு அமைந்தால், நாங்கள் என்னவெல்லாம் செய்கிறோம் என்று சொன்னோமோ, அதில் பெரும்பாலான வாக்குறுதிகளை இந்த எட்டு மாதங்களில் நிறைவேற்றியிருக்கிறோம். ஆட்சியை வழிநடத்துவது திராவிட மாடல் சிந்தனை. அது என்ன திராவிட மாடல் சிந்தனை அப்படி என்று கேட்பவர்களுக்கு என்னுடைய பதில், சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி என்பதாகும்.

புரியும்படி சொல்லவேண்டுமானால் வாய்ப்புகளும், வளங்களும் தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா வரம்பு மக்களுக்கும், எல்லா மாவட்டத்திலிருக்கும் மக்களுக்கும், சரிசமமாக போய்ச் சேர வேண்டும். இதில் எந்த சாதி, மத, வர்க்க, பாலின வேறுபாடும் இருக்கக் கூடாது.  ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது, அங்கு இருக்கின்ற ஒரு சிலருக்கு மட்டும் போய்ச் சேருவதற்கு பதிலாக, அங்கு வாழ்கின்ற எல்லா மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும், அதுதான் உண்மையான வளர்ச்சி, அது தான் திராவிட சிந்தனை. நாங்கள் கொண்டு வருகின்ற ஒவ்வொரு திட்டமும் இந்த சிந்தனையின் அடிப்படையில் தான் உருவாக்கப்படுகிறது.

ஒரு லிட்டர் பாலுக்கு 3 ரூபாய் விலையைக் குறைத்தோம். பெண்களுடைய சமூக உரிமைகளையும், வாய்ப்புகளையும் அதிகரிக்க பெண்களுக்கு இலவச பேருந்து என்ற திட்டம் கொண்டு வந்தோம். தமிழ்நாட்டின் அரசு வேலைகளில் தமிழருக்குத் தான் முன்னுரிமை என்று அரசாணை பிறப்பித்ததன் மூலமாக, நமது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளோம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் அர்ச்சகராக நியமித்தோம். சமூக நீதி என்றால் தமிழ்நாடு தான் என்பதை இந்தியாவிற்கே காட்டினோம். பட்டியலின, பழங்குடி மக்களின் கல்விக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பு திட்டங்களைக் கொண்டு வந்தோம். இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் என்று மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி, அரசாங்கத்தோட அணுகுமுறையில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்.

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று காலம், காலமாக சொல்லப்பட்ட பொய்யை இன்றைக்கு சுக்கு நூறாக உடைத்திருக்கிறோம். உதாரணத்திற்கு, இந்த திமுக ஆட்சியில் தான் ஆக்கிரமிப்பில் இருந்து 1789 கோடி ரூபாய் மதிப்புள்ள 180 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டிருக்கிறோம். 

தேர்தல் அறிக்கையில் சொன்ன மாதிரியே, கோவில் சீரமைப்புக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்க ஆரம்பித்திருக்கிறோம். ஆனால், மதத்தை வைத்து அரசியல் செய்கிறவர்களுக்கு தமிழ்நாட்டைப் பார்த்தால் ரத்த அழுத்தம் ஏறத்தான் செய்யும்.  என்னடா, நாமும் என்னவெல்லாமோ செய்து பார்க்கிறோம், அந்த மக்களுடைய ஒற்றுமையை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று வெறுப்பு இருக்கத்தான் செய்யும். சமூக நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டுகிற நம்முடைய முயற்சிகளுக்கு எதிராக பல விதமான சவால்களை ஒன்றிய அரசு முன்வைக்கிறது. 

அதற்கு உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், சிக்கலான இந்த கொரோனா சமயத்தில் கூட, நமக்கு வரவேண்டிய 16 ஆயிரத்து 725 கோடி ரூபாய் ஜி.எஸ்டி. நிலுவைத் தொகையை தராமல் இழுத்தடிக்கிறார்கள். தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நமக்கு வரவேண்டிய கொரோனா நிவாரண நிதியான 8989 கோடி ரூபாயும் நமக்கு தரப்படவில்லை. இந்த வருடம் யூனியன் பட்ஜெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். கொரோனாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த சலுகையும் இல்லை, உதவிகளும் இல்லை. மேலும் இந்த பட்ஜெட்டில் முக்கியமான முன்னெடுப்பாக வைரத்திற்கு வரியை குறைத்து இருக்கிறார்கள். இதைக்கேட்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. 

நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை குறைத்து, அந்தத் திட்டத்தையே கேள்விக்குறியாக்கி விட்டார்கள். இந்த ஆதிக்க அணுகுமுறையுடன் நீட்சிதான் நீட் தேர்வு. நிறைய செலவு செய்து பயிற்சி வகுப்புகளுக்கு செல்பவர்களுக்குத் தான் பெரும்பாலும் நீட் மூலமாக மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கிறது. 

இதனால், வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைந்து விட்டது. இது எவ்வளவு பெரிய சமூக அநீதி. இந்த அநீதியை எதிர்த்துத் தான் நமது சட்டமன்றத்தில், நீட் வேண்டாம் என்று சட்டத்திருத்தம் செய்தோம். அந்த சட்ட முன்வரைவை கவர்னருக்கு அனுப்பி வைத்தால், கவர்னர் அதை நமக்கே திருப்பி அனுப்புகிறார். 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் கொண்டுவரும் சட்டத்தை தடுக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை தானே. ஆனால் முந்தைய ஆட்சி மாதிரி இல்லாமல், நாம் இந்த அநீதிக்கு எல்லாம் துணை போக மாட்டோம். ஒருபோதும் நமது உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். ஒவ்வொரு சவாலையும் போராடி வெல்வோம். நாம் எல்லாம் ஒன்றாகத் தான் இருக்கிறோம். இனிமேலும் ஒன்றாகத் தான் இருப்போம் என்பதை இந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவு அவர்களுக்கு காட்டட்டும். 

மாநில உரிமைக்கும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் உள்ளாட்சிகளிலும் திமுக ஆட்சி தொடரட்டும். உதயசூரியனுக்கும், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சியின் சின்னங்களுக்கும் வாக்களிக்குமாறு உங்களை உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்’ என காணொளி மூலம் உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.