பண்ருட்டி திருமணத்தில் மாப்பிள்ளையை மாற்றிய விவகாரத்தில் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததால் மாப்பிள்ளை மாற்றியதாக புதுப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

marriage

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஸ்ரீதர். இவருக்கும் பண்ருட்டியை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவருக்கும் கடந்த நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மாப்பிள்ளை வீட்டினர் இந்த திருமணத்தை நடத்தி தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் அதற்காக ஜனவரி 20 ஆம் தேதி திருமணம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரில் நடைபெறும் என தேதி குறிக்கப்பட்டு அதற்காக அழைப்பிதழும் அடிக்கப்பட்டது.

இந்த நிலையில் 19-ம் தேதி  இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் டிஜே என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மாப்பிள்ளை வேண்டாம் என கூறிய நிலையிலும் பெண் வீட்டார் அதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில்  டிஜே நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக ஓடிய நிலையில் மணப் பெண்ணும் மாப்பிளையும் அங்கு நடனமாட அழைக்கப்பட்டனர். அப்போது பெண்ணின் நெருங்கிய உறவினர் ஒருவர் பெண்ணின் தோள் மீதும் மாப்பிள்ளை தோள் மீது கையைப் போட்டுக்கொண்டு நடனம் ஆடியது மாப்பிள்ளை ஸ்ரீதருக்கு பிடிக்கவில்லை. அதனால் அதனை உதறிவிட்டு அவர் மேடைக்கு சென்று விட்டார்.

மேலும் பெண்ணிடம் இதுபோன்று நடப்பது பிடிக்கவில்லை என்று கூறிய நிலையில் மணப்பெண் தன்னை அடித்து விட்டதாக கூறி இந்த திருமணத்தை நிறுத்தி விட்டார். பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் மாப்பிள்ளை ஸ்ரீதரை தாக்கியதாகவும் தெரிய வருகிறது. இந்த நிலையில் உடனடியாக இரவோடு இரவாக பெண்ணின் உறவுக்காரப் பையனை திடீர் மாப்பிள்ளை ஆக்கி  கோவிலில் திருமணமும் நடந்துவிட்டது. இந்த தகவல் சமூக ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் வந்த நிலையில்  மணப்பெண்ணை தாக்கவில்லை என்றும் தன் மீது அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி மாப்பிள்ளை ஸ்ரீதர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார்.

மேலும் திருமணத்தின் போது நடைபெற்ற வீடியோ காட்சிகளை ஆதாரமாக கொடுத்தார். மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது திருமணத்திற்காக தான் 7 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கி செலவு செய்த நிலையில் டிஜே நிகழ்ச்சி தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியதால் உன்னை எப்படி அவமானப்படுத்துகிறேன் என பெண் வீட்டார் ஒரு முடிவு செய்து தன்னை அவமானப்படுத்தும் விதமாக இந்த திருமணத்தை நிறுத்தி வேறு ஒருவருக்கு திருமணம் செய்து அந்த புகைப்படத்தை தனக்கு அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து  தான் பெண்ணை அடிக்கவில்லை அதற்கான ஆதாரமும் இல்லை என தெரிவித்த அவர் அந்த வீடியோவையும் வெளியிட்டார். மேலும் மணமகள் மீதும் மணமகள் வீட்டார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தான் செலவு செய்த தொகையை போலீசார் வாங்கி தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் நேற்று திடீரென மணப்பெண் ஜெயசந்தியா,  ஸ்ரீதர் மீது பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தார். அந்தப்புகாரில், வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணமகன் ஸ்ரீதர் குடிபோதையில் தன்னை தாக்கியதாகவும் கார் மற்றும் 50 பவுன் வரதட்சணையாக கொடுத்தால் மட்டுமே மறுநாள் காலை குறித்த முகூர்த்த நேரத்தில் தாலி கட்டுவேன் என்னைத்தவிர உன்னை யார் திருமணம் செய்துகொள்வார் எனக் கூறி ஸ்ரீதர் தன்னை தாக்கியதாக ஜெயசந்தியா தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இரு தரப்பினரையும் அழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் உடன்பாடு ஏற்படாததால் ஜெயசந்தியா தாம் நீதிமன்றத்தை நாடி தனக்கான நீதியைப் பெற்றுக் கொள்வதாக செய்தியாளர்களை சந்தித்தபோது  தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.