கணவரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் உடலில் கல்லைக் கட்டிக் கொண்டு இரண்டு மகன்களுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் கணவாய் புதூர் ஊராட்சி கே.மோரூர் லேண்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் வயது 32. இவருடைய மனைவி மரகதம் அவருக்கு வயது 30.  இவர்களுக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆகிறது. செல்வகணபதி என்ற 7 வயது மகன் மற்றும் கோகுலக்கண்ணன் என்ற 5 வயது, இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்நிலையில் பிரபாகரனுக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளன. மேலும் அவர் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் நிறுவனமும் நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரபாகரனுக்கும், அவரது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக, அவரது நடத்தையில் மரகதம் சந்தேகப்பட்டதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும் இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை கடந்த 2 மாதத்துக்கு முன்பு வேலையில் இருந்து நிறுத்தி விட்டனர். எனினும் பிரபாகரனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக மரகதம் சந்தேகப்பட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பிரபாகரன் தனது நிறுவனத்துக்கு சென்று விட்டதாக தெரிகிறது. திரும்பி வந்து வீட்டில் பார்த்தபோது மனைவி மற்றும் மகன்களை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் தனது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் மரகதத்தின் செருப்பு மிதந்துள்ளதை பார்த்தார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் 3 பேரையும் கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிணற்றுக்குள் இருந்து 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.

மேலும் மரகதத்துக்கு நீச்சல் தெரியும் என்பதால் உடலில் கல்லை கட்டிக்கொண்டு 2 மகன்களை அணைத்துக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மரகதம் மகன்களை கொன்று தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பிரபாகரனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இரண்டு பிள்ளைகளுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.