பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தில் புகாருக்கு காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

pongal gift

தமிழகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது தொடர்பான ஆய்வு கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள குடும்பத்தினருக்கும் என மொத்தம் 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட முதல்-அமைச்சர் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்கள். மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்கள் தரமானதாகவும், எண்ணிக்கை குறைபாடு இல்லாமலும் இருக்க வேண்டுமென்பதில் அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, அதற்கு முறையான விதிமுறைகளை வகுத்து, அதன்படி பொங்கல் தொகுப்பு பையினை விநியோகம் செய்திட ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் பொங்கல் பரிசு பொருட்கள் அனைத்தும் முறையாக திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம், சரியான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன; கடந்த ஆட்சி காலத்தில் 6 பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் 21 பொருட்கள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டன. மேலும், தற்போது வழங்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், அவை கூடுதல் எடையளவில் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் நல்ல முறையில் நடைபெற்றிருந்த நிலையில், மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் சில நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட பொருட்களில் சில குறைபாடுகள் இருந்ததாக புகார்கள் அரசுக்கு வரப்பெற்றன. இவற்றை விசாரித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது; உரிய தரத்துடன் பொருட்களை வழங்க தவறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து பரிசு தொகுப்பு விநியோகம் குறித்து முதல்-அமைச்சர் இன்று தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார்கள். இந்த ஆய்வு கூட்டத்தில், பொங்கல் பரிசு பொருட்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தின்போது துறையால் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து அலுவலர்கள் விளக்கினர். மேலும், தர கட்டுப்பாடு குறித்த விவரங்களும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விரிவான ஆய்வுக்கு பின்னர், முதலமைச்சர், பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழ காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை, கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தினார். பொது மக்களுக்கு அனைத்து வகையிலும் தரமான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டுமெனவும், அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் நியாய விலை கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எப்போதும் தரமானதாகவும், உரிய எடையிலும் விநியோகம் செய்யப்படுவதை அந்தந்த பகுதிகளிலுள்ள அரசு அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டுமென்றும், தவறு செய்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், கூட்டுறவு துறை அமைச்சர் இ. பெரியசாமி, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் அமைச்சர் அர. சக்கரபாணி மற்றும் நிதி துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.