காதலுக்காக காதலியின் அம்மாவுக்கு காதலன் கிட்னி கொடுத்த நிலையில், அந்த காதலி இன்னொருவரை திருமணம் செய்துகொண்டு சென்று விட்டதால், கடும் அதிர்ச்சியடைந்த காதலன் புலம்பித் தவிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மெக்ஸிகோ நாட்டில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, தமிழ் சினிமாவில் இப்படியான சில காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம்.

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் நரேன் நடிப்பில் வெளிவந்த “நெஞ்சிருக்கும் வரை” படத்தில் தான் இதை போன்ற ஒரு காட்சி வரும்.

“நெஞ்சிருக்கும் வரை” படத்தில், தனது காதலியின் உயிரை காப்பாற்ற இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று, மருத்துவர்கள் கூறுவார்கள்.

அப்போது, வேறு வழியில்லாமல் காதலியின் உயிரை காப்பாற்றுவதற்காக, அந்த காதலன் தனது இதயத்தை கொடுக்கும் நோக்கில் தற்கொலை செய்து? அவர் காதலுக்காக உயிர் தியாகம் செய்து கொள்வதை போல ஒரு காட்சி படமாக்கப்பட்டு இருக்கும். 

இப்படி, சினிமாவுக்காக அமைக்கப்படும் இந்த மாதிரியான சில காட்சிகள், சில நேரங்களில் நமது வாழ்க்கையில் நம் கண் முன்னே உண்மையாகவே நடப்பது உண்டு. அப்போது தான், நாம் இன்னமும் பிரமித்துப் போய்விடுகிறோம்.

ஆனால், சினிமாவில் வருவது போன்று இந்த காட்சிகளுக்கு நேர் மாறாகவும் சில சமயங்களில் நடக்கும் போது தான், அது இன்னுமும் நம்மிடையே பேசும் பொருளாக வைரலாகி விடுகிறது. அப்படியான ஒரு சம்பவம் தான், தற்போது மெக்ஸிகோ நாட்டில் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

அதுவும், தனது காதல் எவ்வளவு உயர்ந்ததென்று வெளிப்படுத்தும் விதமாக, சிறுநீரகத்தால் பாதிக்கப்பட்ட காதலியின் தாய்க்கு, காதலன் ஒருவன் தனது சிறுநீரகத்தை தானமாக அளித்த அடுத்த ஒரே மாதத்திற்குள், சம்மந்தப்பட்ட அந்த காதலி, காதலனை ஏமாற்றிவிட்டு, அந்நாட்டைச் சேர்ந்த வேற ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு சென்றுவிட்டதாக சம்பவம் தற்போது நிகழ்ந்திருக்கிறது.

மெக்ஸிகோ நாட்டின் பாஜா கலிபோர்னியா என்னும் பகுதியைச் சேர்ந்த உசியேல் மார்டினெஸ் என்பவர், அந்த பகுதியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர், சமீபத்தில் தனக்கு நேர்ந்த ஒரு வித்தியாசமான அனுபவம் பற்றி பேசி டிக் டாக்கில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோதான், தற்போது உலகம் முழுவதும் பெரும் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பேசி உள்ள அந்த ஆசியர் உசியேல் மார்டினெஸ், “எனது காதலியின் தாயாருக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்தேன். ஆனால், நான் எனது சிறுநீரகத்தை தானம் அளித்த அடுத்த ஒரு மாதத்துக்குள், என் காதலி என்னை ஏமாற்றிவிட்டு வேற ஒரு நபரை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார்” என்று, அவர் வேதனையோடும், கவலையோடும் அதில் பேசி உள்ளார்.

இந்த வீடியோ, உலகம் முழுவதும் பெரும் வைரலான நிலையில், காதலனை ஏமாற்றிவிட்டுச் சென்ற அந்த காதலியை பலரும் இணையத்தில் வசைப்பாடினார்கள்.

தற்போது, அதன் தொடர்ச்சியாக, மேலும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ள அந்த காதலன் உசியேல் மார்டினெஸ், “நான் வெளியிட்ட வீடியோவை இத்தனை பேர் பார்ப்பார்கள் என, நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என்றும், அந்த வகையில், அந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்த்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றும், கூறியுள்ளார்.

குறிப்பாக, “என் காதலி மீது எனக்கு எந்த விதமான தர்ம சங்கடம் இல்லை என்றும், தனது காதலி மீது எனக்கு எந்த விதமான வெறுப்பும் கிடையாது” என்றும், பேசி உள்ளார்.

காதலி ஏமாற்றிவிட்டுச் சென்றது குறித்து காதலன் புலம்பி வெளியிட்டுள்ள இந்த வீடியோவை 14 மில்லியன் பார்வைகளை தாண்டி, தற்போது பார்க்கப்பட்டு உள்ளது.

எனினும், காதலியால் ஏமாற்றப்பட்ட உசியேல் மார்டினெஸ்க்கு பலரும் தற்போது ஆறுதல்களை கூறி, அவரை தேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.