திருவண்ணாமலையில் கிரிவல பாதை அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு  சிலை அமைக்க சென்னை  உயர்நீதிமன்றம்  தடை விதித்து  உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கப்பட இருந்தது, இதனை எதிர்த்து, அதே மாவட்டத்தைச்  சேர்ந்த ஜி. கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது அவர் தனது மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது: வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கி, அருகிலிருந்த  நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்து  சிலை அமைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.   அத்துடன் இந்த சிலை அமைப்பதானால், கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான  பக்தர்கள் பாதிக்கப்படுவர் எனவும், அப்பகுதியில் உள்ள கால்வாயில் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் எ.வ. வேலு, அவரது மகன் குமரன் ஆகியோர் கூட்டு சேர்ந்து முறைகேடாக பட்டா பெற்றிருப்பதாகவும் மனுவில்  குற்றம் சாட்டியிருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த சென்னை  உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தையும் ஆவணங்களையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.  அதுவரை சிலை அமைக்கும் விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்கும் என்றும் உத்தரவிட்டிருந்தது,  இந்நிலையில் இன்று இந்த வழக்கு  நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.  அப்போது அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.   

இந்நிலையில் தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோரின் அறிக்கை பெற வேண்டியுள்ளதாலும், ஆக்கிரமிப்பு புகார் குறித்து புதிய தகவல்களை பெற வேண்டியிருப்பதாலும்  அவகாசம் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது.  ஆட்சியரின் செயலுக்கு  அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஆதாரங்களை சேகரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். முன்பு தெரிவித்தது போலவே அறிக்கை சமர்பிக்கும் வரை, கலைஞர்  கருணாநிதி சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தும், தமிழக அரசு, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், அமைச்சர் எ.வ.வேலு, ஜீவா கல்வி அறக்கட்டளை ஆகியோர் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.