பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழ்க்கில்  சுப்ரீம் கோர்ட்  நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் தஇன்று தீர்ப்பு வழங்கினர். 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை விடுவித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்  தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில்சுப்ரீம் கோர்ட்  இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதாகும். நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், பேரறிவாளன் வழக்கில் கவர்னர்  செய்த கால தாமதம் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டது. அவரின் விடுதலை மீது கவர்னர்  முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியது. 28 மாதங்கள் இதில் முடிவு எடுக்காமல் இருந்தது தவறு. அவர் காலதாமதம் செய்தது தவறு. இதனால் அவரை விடுதலை செய்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. இந்நிலையில் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து, தமிழகம் முழுவதும், காங்கிரஸ் கட்சியினர் தங்கள் பகுதியில் வாயில் வெள்ளை துணி கட்டி இன்று போராட்டம் நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைமையகமான அருணாச்சலம்மன்றம் முன்பு, திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் தலைமையில், காங்கிரசார் வாயில் துணியை கட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில், மாநகர் மாவட்டத் தலைவர் ஜவஹர், முன்னாள் மேயர் சுஜாதா, மாவட்டப் பொருளாளர் பஷீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரறிவாளன் விடுதலையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் எம்.பி., திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: ஆளுநர் மீதான தவறினால், உச்சநீதிமன்றம் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பேரறிவாளனை விடுவித்துள்ளது. அவர் குற்றமற்றவர் என்றோ, நிரபராதி என்றோ விடுதலை செய்யவில்லை. சட்டத்தின்படி இது சரியென்றாலும் தர்மத்தின் படி தவறு.

இந்நிலையில் ஏற்கனவே பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கின்றனர். அப்படி இருக்கையில், கருணை அடிப்படையில் விடுவிப்பு என்பது தவறான முன்னுதாரணமாகி விடும். பேரறிவாளன் தவிர்த்த மற்ற ஆறு பேர்களின் விடுதலையை, மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். மேலும் அதைவிட, பேரறிவாளன் விடுதலையை ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் விடுதலையை போல வெடி வெடித்து கொண்டாடுவது ஏற்புடையதல்ல. இதனைக்கண்டு காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர். இதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

அதனைத்தொடர்ந்து பாஜகவுடன் திமுக கூட்டணி என்பது அதிகாரப்பூர்வமற்ற தகவல், காங்கிரஸ் கட்சியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் இணக்கமாக இருக்கிறார். கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவிப்பதே அதிகாரபூர்வமானது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை வைத்து திமுக-காங்கிரஸ் இடையே யாரும் விரிசலை ஏற்படுத்த முடியாது. இது வேறு கூட்டணி என்பது வேறு என்று தெரிவித்தார்.

திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, மாவட்டத் துணைத்தலைவர் சிக்கல் சண்முகம் என்பவர், “கொலைக்காரனை வெளியே விட்டதற்கு கொண்டாட்டம் நடத்துகின்றனர். காங்கிரஸ்காரன் வயிறு எரியுது” என்று தொடர்ந்து கூச்சல் எழுப்பியபடியே இருந்தார். இதனால் போராட்டத்தில் சற்று  சலசலப்பு ஏற்பட்டது.