#IND vs #PAK நாடுகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்திலேயே தமிழக வீரர் கோல் அடித்து அசத்தி உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அவரது வீட்டில் அந்த வசதி இல்லாததால், அவரது பெற்றோர் பக்கத்து வீட்டில் உள்ள TV யில் பார்த்து ரசித்து ஆர்ப்பரித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஆசியக்கோப்பை ஹாக்கி தொடரானது, இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. 

இந்த போட்டியில் முதல் நாளிலேயே பரம்பரை எதிரிகளாக பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

அதன்படி, இந்த ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்தி மற்றும் மாரீஸ்வரன் என 2 தமிழக இளைஞர்களும் கலந்துகொண்டு விளையாடினர்.

குறிப்பாக, சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் தமிழக வீரர்கள் இடம் பிடித்தது இதுவே முதல் முறையாகும்.

இப்படியான பெருமையுடன் இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்ற தமிழக வீரர்கள் களத்தில் நிற்க, ஆட்டமே அமர்களப்பட்டது. 

அதன்படி, பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் பீரேந்திர லக்ரா தலைமையிலான இந்திய அணியில் தொடக்க லெவனிலேயே தமிழக வீரரான அரியலூரைச் சேர்ந்த கார்த்தி, தனது அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இப்படி, தான் களம் இறங்கிய முதல் போட்டியிலேயே தமிழக வீரர் கார்த்திக், இந்திய அணிக்காக தனது முதல் கோலை அடித்து அசத்தினார்.

குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில், தமிழக வீரர் கார்த்திக், முதல் கால் பாதியிலேயே கோல் அடித்து அசத்தினார். அதாவது, இந்த போட்டி தொடங்கிய 8 வது நிமிடத்திலேயே, தனக்கு கிடைத்த ஒரு பெனால்டி வாய்ப்பில் ட்ராக் ஃப்ளிக் செய்து கோல் ஆக்கினார் தமிழக வீரர் கார்த்திக். 

முக்கியாக, இந்த போட்டியில் இந்திய அணிக்கு ஒட்டு மொத்தமாக 8 பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தன. இதில், தமிழக வீரர் கார்த்தி மட்டுமே கோல் அடித்து அசத்தினார். 

கார்த்திக் அடித்த இந்த கோலால், இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி ஒரு நிமிடம் இருக்கும் போது, பாகிஸ்தான் அணி ஒரு கோலை அடித்தது. இதனால், இந்த போட்டியானது டிரா ஆனது.

குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில், தமிழக வீரர் கார்த்திக், கலந்துகொண்டு தனது முதல் ஆட்டத்தை விளையாடுவதை பார்க்க, அவரது சொந்த ஊரில் அவரது பெற்றோர் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால், கார்த்திக்கின் பெற்றோர் வசிக்கும் வீட்டில் உள்ள டிவியில் அந்த ஒளிபரப்பு வசதி இல்லாமல் இருந்தது. இதனால், கார்த்திக்கின் பெற்றோர், தனது மகன் விளையாடுவதை அவரது பக்கத்து வீட்டில் இருந்த டி.வி. யில் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது, கார்த்திக் ஆட்டத்தின் முதல் கால் பாதிலேயே கோல் அடித்து அசத்திய நிலையில், இதனைப் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த கார்த்திக்கின் பெற்றோர், எழுந்து நின்று கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

அத்துடன், தனது மகன் சூப்பராக விளையாடுவதைப் பார்த்து, கார்த்திக்கின் பெற்றோர் அப்படியெ ஆனந்த கண்ணீர் வடித்தனர். இந்த வீடியோ மற்றும் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.