வெளிநாட்டு தொழிலதிபர் கோவையில் திமுகவுக்கு ஓட்டு கேட்டு பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, ரூமானியா நாட்டை சேர்ந்த நிகோட்டா ஸ்டெஃபன் மெரிஸ் என்ற  தொழிலதிபர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதுவும், கோவை சிங்காநல்லூர் பகுதியில் அவர் பொது மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அதாவது, தொழில் நிமித்தமாக ரூமானியா நாட்டில் இருந்து கோவை வந்து உள்ள தொழிலதிபர் நிகோட்டா ஸ்டெஃபன் மெரிஸ், தனது தோளில் திமுக துண்டு அணிந்த படி, தனது கையில் உதயசூரியன் சின்னத்துடன் சாலையில் நடந்து சென்றும், இருசக்கர வாகனம் மற்றும் பேருந்துகளில் பயணித்தும், தனியார் நிறுவனங்களில் ஊழியர்களிடமும் துண்டு பிரசுரங்கள் கொடுத்தும், அவர் திமுகவுக்கு ஆதரவு கேட்டு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வெளிநாடடுக்காரர் ஒருவர் கோவையில் வந்து திமுகவிற்காக ஓட்டு கேட்டு சென்றது, அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், வியப்பயும் ஏற்படுத்தியது. 

அதுவும், “தமிழ்நாடு அரசு பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பற்றி அறிந்து ரொம்பவே உற்சாகம் அடைந்து அந்த வெளிநாட்டுக்காரர், திமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக” அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“தமிழக அரசின் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தால், இத்திட்டத்தினால் ஏழை மக்கள் மிகவும் பயனடைவார்கள் என்றும், அவர்களது பணம் மிச்சமாகும் என்பதால், திமுகவிற்கு ஆதரவாக துண்டு பிரச்சுரங்களை வழங்கி ஆதரவு திரட்டியதாவும்” அவர், செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

அதாவது, பிஸினஸ் விசாவில் தமிழகம் வந்துள்ளவர்கள் கடை பிடிக்க வேண்டிய இந்திய விதிமுறைகளை மீறி, வெளிநாட்டவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது விசா விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், இதனால் அவர் சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள மத்திய இமிகிரேசன் துறை ரூமானியா நாட்டை சேர்ந்த நிகோட்டா ஸ்டெஃபன் மெரிஸ்க்கு நோட்டீஸ் வழங்கி உள்ளது. 

இதன் காரணமாக, அவர் அசல் ஆவணங்களுடன் இன்று, அந்த அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

அதே நேரத்தில், அவர் அளிக்கும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்றால், 1946 வெளி நாட்டவர் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது. 

இதனிடையே, திமுகவிற்கு ஆதரவாக வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டதும், இதனால் அவருக்கு இமிகிரேசன் துறை நோட்டீஸ் வழங்கி இருப்பதும்” தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.