“தமிழ்நாட்டில் கொரோனா கால ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது என்றும், விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். 

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று 2 வது அலையாகப் பரவிக்கொண்டு இருக்கும் நிலையில், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மிக கடுமையான கடப்பாடுகள் விதிக்கப்பட்ட உள்ளன.

இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டதுடன், பொருளாதாரமும் மிகப் பெரிய அளவில் சரிசை சந்தித்து உள்ளன.

இந்நிலையில், இது தொடர்பாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் காணொலி வெளியிட்டு, அந்த காணொளி வாயிலாகத் தமிழக மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார். 

அதில், “எல்லாரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?” என்று நலம் விசாரித்து உள்ளார். 

அத்துடன், “கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து தான், மற்றொருவருக்குப் பரவுகிறது. அதனால், கொரோனா தொற்று தங்கள் மீது பரவாமல் இருக்க ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

அதே போல், “நீங்களும் மற்றவர்களுக்குப் பரப்பிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலைத் தடுத்துவிட முடியும்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“கடந்த 24 முதல் ஏழு நாட்களுக்குத் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 7 நாட்களுக்குத் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 24 ஆம் தேதி முதல், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. 

சென்னையில் 7 ஆயிரம் வரை எட்டிய கொரோனா பாதிப்பு, தற்போது 2 ஆயிரமாகக் குறைந்து விட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் முழுமையாகக் குறைந்து விடும். கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் கடந்த வாரத்தில் அதிகமாகியது. அதுவும் கடந்த 2 நாட்களாகக் குறைந்து வருகிறது.

இதனால், கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். 

முழு ஊரடங்கு காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து பல்வேறு ஏற்பாடுகளை அரசு செய்து தந்து உள்ளது. மக்களை நோக்கி காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வந்து சேர ஏற்பாடுகள் செய்துள்ளோம். ரேசன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பொது மக்களுக்குத் தேவையான 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு தரப்பட உள்ளது. இதனைப் பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றும், முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“முழு ஊரடங்கு காரணமாக பொது மக்களில் குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உண்மைதான். அதனால் தான், கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமா 2000 ரூபாயைக் கொடுத்து உள்ளோம். விரைவில் அடுத்த 2000 ரூபாயைக் கொடுக்கப் போகிறோம். இதனைப் பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி கூட பாராட்டி உள்ளார்.

இருந்தாலும், ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போகமுடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதுவும் மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றினால், கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நம்மால் முடியும்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“மக்கள் கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடித்தால் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்” என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, “மக்களைக் காக்கும் மகத்தான பணியில் என்னை நானே ஒப்படைத்துக் கொண்டுள்ளேன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை பி.பி.இ கிட் உடை அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும், ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும் என்று சொல்வார்கள். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும் அரசாக செயல்படுகிறது” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

“கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும், தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே நான் உள்ளே சென்றேன்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து உள்ளார்.

முக்கியமாக, “தமிழக மக்களைக் காக்கவே, என்னை நான் ஒப்படைத்துக் கொண்டுள்ளேன். கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களைப் பார்க்க நான் சென்றதன் மூலமாக, பதற்றம் அடையும் மக்களுக்கு நான் சொல்வது, இந்த எச்சரிக்கை உணர்வு அனைத்து மக்களுக்கும் வந்தாக வேண்டும். இத்தகைய தொற்றுக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்” என்றும். அவர் வலியுறுத்தி உள்ளார்.

“அதனால், தமிழக அரசின் கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு சிலர் மீறினாலும், அதனால் முழுப்பயன் கிடைக்காமல் போய்விடும்” என்றும், அவர் கவலைத் தெரிவித்து உள்ளார்.

“முதல் அலைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கத் தவறியதால்தான், தற்போது 2 வது அலையை நாம் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இந்த 2 வது அலையானது தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புக்கும், நிதி நிலைமைக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதில். இருந்து நாம் விரைவில் மீண்டாக வேண்டும்” அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

இறுதியாக, “நிகழ்காலச் சோகங்களில் இருந்து மீண்டு, எதிர்காலப் புத்துணர்வைத் தமிழக மக்கள் அனைவரும் பெற்றாக வேண்டும் என்றும், கொரோனா தொற்றை வெல்வோம், நமக்கான வளம் மிகுந்த தமிழகத்தை அமைப்போம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.