தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கியவர்களை சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கும் நபர்களுக்கு 5,000 ரூபாய் ரொக்கம் மற்றும் நற்சான்று வழங்கப்படும்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த  பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதும் முதல் நிகல்வாக மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் ஜானகிராமன், கருப்பண்ண உடையார், மாரப்பன், ரசாக், வேழவேந்தன் ஆகியோருக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், பாமக எம்எல்ஏ அருள் எழுந்து, “சாலை விபத்துகளை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக பாராட்டுகள்;  காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை கிடைக்க தன்னார்வலர்களை ஊக்குவிக்க அரசு ஆவண செய்யுமா?” என்று, கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போதே, பலமுறை இந்த சாலை விபத்துக்களைப் பற்றி, அதனுடைய எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பற்றிக் நான் கவலையுடன் உரையாற்றி இருக்கிறேன்” என்று, சுட்டிக்காட்டினார். 

“அதை மனதிலே வைத்து நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், சாலைகளில் மக்களுக்குப் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்திட வேண்டும், என்பதை இந்த அரசினுடைய முதன்மையான இலக்காக நாங்கள் அமைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று, குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'சாலை விபத்துக்களை தடுக்கும் விதமாக என்னுடைய தலைமையில் உயர் மட்டக் குழுக் கூட்டம் ஒன்றினை கடந்த 18.11.2021 அன்று கூட்டி ஆலோசித்து, 'இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும்-48' என்ற உயிர் காக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது” என்று, சுட்டிக்காட்டினார்.

அத்துடன், “சீரான சாலைகள் திட்டம், விபத்தில் சிக்கும் அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கக்கூடிய இலவச சிகிச்சை, சாலைப் பாதுகாப்பு ஆணையம், அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டம், இன்னுயிர் காப்போம் - உதவி செய் என்கிற 5 அம்சத் திட்டமாக அது இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்றும், பெருமிதத்தோடு தெரிவித்தார். 

“நானே கடந்த 18-12-2021 அன்று மேல்மருவத்தூர் சென்று 'இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும்-48' என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தேன், அது முதல் இத்திட்டம் மிகத் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு சாலைகளில் பாதுகாப்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான அனைத்துச் சூழல்களும் உருவாக்கப்பட்டு உள்ளன” என்றும், குறிப்பிட்டார். 

இத்திட்டத்தின் மூலம் விபத்துக்களில் சிக்குவோருடைய உயிர் காப்பாற்றப்படுகிறது என்றும், அந்த வகையில் கடந்த 18.12.2021 முதல் 18.3.2022 வரை அரசு மருத்துவமனைகளில் 29 ஆயிரத்து 142 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4,105 பேரும் என மொத்தமாக 33 ஆயிரத்து 247 பேர் இந்த '48 மணி நேர இலவச' சிகிச்சையைப் பெற்றிருக்கிறார்கள்” என்றும், அவர் கூறினார். 

மேலும், “இவர்கள் சிகிச்சை பெற்றார்கள் என்பதைவிட, 33 ஆயிரம் குடும்பங்கள் இத்திட்டம் மூலம் காப்பாற்றப்பட்டு இருக்கின்றன என்பதை நான் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும், முதல்வர் பெருமையோடு நினைவு கூர்ந்தார்.

குறிப்பாக, “நாட்டிற்கே முன்னோடியாக விளங்கும் இந்தத் திட்டத்திற்காக இது வரை 29.56 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருக்கிறது என்பதையும், இத்திட்டம் மேலும் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பையும், சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்பதையும் உறுதி செய்யக்கூடிய உயரிய நோக்கத்தோடு, அரசு இனி வரும் காலங்களிலும் தீவிரமாகச் செயல்படும் என்று மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக இந்த விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முக்கியமாக, “சாலை விபத்தில் சிக்கிய நபர்களை உடனடியாக Golden Hours க்குள் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து அனுமதித்து, உயிரைக் காக்கக்கூடிய மனித நேயப் பண்போடு பணியாற்றும் நல்ல உள்ளங்களுக்கு நற்கருணை வீரன் என்ற நற்சான்றிதழும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.