நடிகர் மாதவன் கடைசியாக திரையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பிளாக்பஸ்டர் ஹிட்டான விக்ரம் வேதா படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதியுன் இணைந்து நடித்திருந்தார். அதன்பிறகு மகளிர் மட்டும் படத்தில் ஒரு கேமியோ ரோலில் காணப்பட்டார். அதன்பிறகு மாதவன் தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக்கொண்டு ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் மாதவன் நடித்த நிசப்தம்/ சைலன்ஸ் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியானது. 

கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற படம் சார்லி. துல்கர் சல்மான் நாயகனாக நடித்த இந்த படத்தில் பார்வதி ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. தமிழில் மாறா என்ற பெயரில் ரீமேக்காகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்குகிறார். 

மாதவன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இதில் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைகிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கவிஞர் தாமரை பாடல் வரிகள் எழுதியுள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். ஸ்டாண்டப் காமெடியன் அலெக்ஸ் இதில் திரைக்கதை எழுதியுள்ளார். பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா தயாரித்த இந்த படம் டிசம்பர் 17-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. 

சென்ற லாக்டவுனில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் வெளியாகி ஓடிடி தளத்திற்காக பாதையை வகுத்தது. அதன் பின் சூர்யாவின் சூரரைப் போற்று வெளியாகவுள்ளது. சில நாட்கள் முன்பு விஜய் சேதுபதி நடித்த க.பெ. ரணசிங்கம் திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்த பட்டியலில் நடிகர் மாதவனும் இணைந்துள்ளார் என்பதை பாராட்டி வருகின்றனர் இணையவாசிகள். ஏற்கனவே அனுஷ்கா மற்றும் மாதவன் நடித்த சைலன்ஸ் திரைப்படம் அமேசான் ப்ரைமில் தான் வெளியானது என்பது அனைவரும் அறிந்ததே. 

கொரோனா நோய் பரவல் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே மாறா திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாம். படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் துவங்கி சமீபத்தில் நிறைவடைந்தது. கடந்த வாரம் படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. படப்பிடிப்பு தளத்தில் மாதவன் கையில் காஃபி மக்குடன் காணப்பட்டார். ஷிவதா மற்றும் ஷ்ரத்தா கொண்ட மற்றோரு புகைப்படமும் ரசிகர்களை ஈர்த்தது. 

இந்த படத்தை தொடர்ந்து மாதவன் கைவசம் ராக்கெட்ரி திரைப்படம் கைவசம் உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்கிறார். நம்பி நாராயணன் மேல் எழுந்த குற்றச்சாட்டும், சிறை வாழ்க்கையும், பின்னர் குற்றமற்றவர் என்று நிரூபணமானதும் ஒரு கமர்ஷியல் திரைக்கதையிலும் காண முடியாத வலியான திருப்பங்கள். இந்த அனுபவங்களை நம்பி நாராயணனோடு விவாதித்து திரைக்கதை எழுதி உள்ளார் மாதவன்.