எனக்கு கொரோனாவா ? நடிகை அஞ்சலி மறுப்பு !
By Sakthi Priyan | Galatta | April 08, 2021 17:08 PM IST
அங்காடி தெரு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அஞ்சலி. அதைத் தொடர்ந்து எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறிய அவர், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் காதல் தோல்வியில் இருந்து மீண்டது குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: நான் காதலில் விழுந்தேன் என்றும், எனக்கு குழந்தைகள் இருக்கிறது என்றும் தகவல் பரவி உள்ளது. காதலில் விழவே இல்லை என்று நான் பொய் சொல்ல மாட்டேன். ஒருவரோடு காதலில் இருந்தேன். அது நிறைவேறவில்லை. அது நடந்து இருந்தால் நானே பெருமையாக எல்லோருக்கும் சொல்லி இருப்பேன்.
நடிகை மட்டுமன்றி எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் காதல் தோல்வியானால் அந்த வேதனையை தாங்கி கொள்வது கஷ்டம்தான். பெண்கள் இதயம் கல் இல்லை. ஆனால் அந்த வேதனையில் இருந்து நான் கொஞ்சம் சீக்கிரமாகவே வெளியே வந்து விட்டேன். அதற்கு எனது அம்மாதான் காரணம். அவர் வலிமையான பெண். அம்மா கொடுத்த தைரியத்தில்தான் இன்னும் சினிமாவில் நீடிக்கிறேன் என்று கூறியிருந்தார்.
தெலுங்கில் வக்கீல் சாப் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் நடித்துள்ள மற்றொரு நடிகையான நிவேதா தாமஸ் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அஞ்சலியும் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிலர் வதந்திகளைப் பரப்பியுள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அஞ்சலி. எனது நலம் விரும்பிகளுக்கும், நண்பர்களும், அன்பான ரசிகர்களுக்கும், எனக்கு கொரானோ பாதிப்பு இல்லை, என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குக் கொரானோ என சில செய்திகள், இணையதங்களில் வெளிவந்துள்ளன என்பது என் கவனத்திற்கு வந்துள்ளது.
எனக்கு கொரானோ பாசிட்டிவ் என்பது முற்றிலும் தவறான ஒரு தகவல். நான் முற்றிலும் நலமாகவும், பாதுகாப்பாகவும், உள்ளேன். நீங்களும் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
— Anjali (@yoursanjali) April 8, 2021