இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் அடுத்த பாகம் இரண்டாம் குத்து என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசருக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன. இதில் முதல் பாகத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயகுமார் ஹீரோவாக நடித்து, இயக்கியுள்ளார். டேனி, நான் கடவுள் ராஜேந்திரன், சாம்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சந்தோஷ் ஜெயகுமாரும், டேனியலும் வாழைப்பழங்களை வைத்துக்கொண்டு கொடுத்த போஸ், சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு இயக்குனர் பாரதிராஜாவும் ஆவேசமாக கண்டனம் தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், இரண்டாம் குத்து படத்தின் விளம்பரத்தை பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்? என்று கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் இந்தப் படத்துக்கு ஆதரவாக, இதில் நடித்துள்ள நடிகர் சாம்ஸ் சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார். ரசிகர்கள் கண்டபடி அவரை திட்டியதால், இப்போது தனது முடிவை அவர் திடீரென மாற்றியுள்ளார். இதுபற்றி விளக்கம் அளித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

இரண்டாம் குத்து படம் சம்பந்தமாக என்னை தெளிவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு சில சந்தேகங்கள், குழப்பங்களை வெளிப்படுத்தி இருந்தேன். அந்தப் பதிவிற்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டும் இருந்தது. பலரும் சொன்ன கருத்துக்கள், என் நல விரும்பிகள் சொன்ன அட்வைஸ்களை வைத்து தற்போது என் முடிவை சொல்லவே இந்தப் பதிவு.

'இதுபோன்ற அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்களில் OTT தளங்களில் என தாராளமாக வந்து கொண்டிருக்கின்ற நிலையில், அதே போன்று ஒரு விஷயத்தை படமெடுத்து சென்சாரின் அனுமதியோடு வெளியிடுகிறேன். என் படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்பு காட்டுகிறீர்கள் என்று இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் கேட்டிருந்தார்.

அவன் செஞ்சா, நீ செய்வீயா? என்று மற்றவர்கள் போல் கேட்டுவிட்டு என்னால் போக முடியவில்லை. மற்றவர்கள் செய்த தவறை இயக்குனர் சொல்வது போல் நானும் கண்டும் காணாமல் தான் போயிருக்கிறேன். அதை தாண்டி இவர் படத்தில் நடித்து வேறு இருக்கிறேன். அப்படி இருக்கையில், இவரை ஏன் இப்படி ஒரு படம் எடுத்தீர்கள்? என்று கேள்வி கேட்கும் தகுதி, அருகதை, நேர்மை எனக்கில்லை.

இதுவரை நான் நடித்த படங்களில் கண்ணியமாகவே நடித்திருக்கிறேன் . அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய நடிகனாகவே இருக்கிறேன். இந்த மாதிரியான ஜானர் படங்கள் இப்பொழுது சகஜமாக வருகிறதே, அந்த வயது இளைஞர்களுக்கு தெரிந்த விஷயத்தை ஜாலியாக, காமெடியாக செய்யப்போகிறோம்.

A படம் என்று சென்சார் சர்டிபிகேட்டோடு வரப் போகிறது, இதில் என்ன இருக்கிறது ? நடித்தால் என்ன ? என்றுதான் இந்தப் படத்தில் நடித்தேன். ஆனால் இந்தப் படத்திற்கு இருக்கின்ற எதிர்ப்பை மனதில் கொண்டும் என் கண்ணியத்தை காப்பாற்றும் பொருட்டும், இனி இரண்டாம் குத்து போன்ற நேரடி அடல்ஸ் ஒன்லி படங்களில் நடிப்பதை தவிர்ப்பது என்று முடிவு எடுத்திருக்கிறேன். முதலில் என்னை மாற்றிக் கொள்கிறேன். தனிமனித ஒழுக்கமே சிறந்தது என்பது என் கருத்து. இவ்வாறு கூறியுள்ளார்.