ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்ட வியாபாரி தனது மனைவியுடன் ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயன்று விஷம் குடித்த நிலையில், தற்போது அவரின் மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு வியாபாரிதான், நேற்றையத் தினம் தற்கொலைக்கு முயன்று தற்போது உயிரிழந்திருக்கிறார்.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒரு வியாபாரி, நேற்று முன்தினம் ஃபேஸ்புக் நேரலையில் வந்து, தனது மனைவியுடன் விஷம் குடித்தார். 

அப்போது, “மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி.யால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும், பிரதமர் மோடி வியாபாரிகளின் நலனை காக்கவில்லை” என்றும், விஷம் குடித்துக்கொண்டே அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

அதாவது, நேற்று முதல் கட்ட தேர்தல் நடைபெறும் நகரங்களில் ஒன்றான பாக்பத்தை சேர்ந்த காலணி வியாபாரியான ராஜீவ் தோமர் என்பவர் தான், இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் ஆவர். 

அதாவது, வட மாநிலங்களில் நடைபெறும் 5 மாநில தேர்தலுக்கு முன்னதாக வைரலாகி வரும் இந்த வீடியோவானது, வட மாநிலங்களில்  பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

இது தொடர்பாக பரவும் அந்த வீடியோவானது, சுமார் 2 நிமிடங்கள் வரை ஓடுகிறது. அந்த வீடியோவில், “ராஜீவ் தோமர் ஒரு பையில் இருந்து மருந்தினை எடுத்து விழுங்க முயல்கிறார். அனால், அவரது மனைவி அதை தடுக்க முயல்கிறார். ஆனாலும், மனைவியின் தடுப்பையும் மீறி அந்த நபர் அதை விழுங்கிய பிறகு அவரது மனைவி அதனை துப்ப வைக்கவும் முயல்கிறார். ஆனால், அது முடியாமல் அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது. 

அதன் தொடர்ச்சியாக, கணவன் அருந்திய அந்த மருந்தினை, அந்த மனைவியும் சாப்பிட்டதாக தெரிய வந்தது.

இப்படியாக, கணவன் மனைவி இருவரும் விஷம் சாப்பிடும் சம்பவத்தை ஃபேஸ்புக்கில் நேரலையில் பார்த்தவர்கள், உடனடியாக இது குறித்து அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விஷம் சாப்பிட்ட கணவன் மனைவி இருவருயும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் தான், அவர்கள் இருவரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், 38 வயதான பூனம் தோமர் மருத்துவமனையில் தற்போது பரிதாபமாக உயிரிழந்தார். என்றாலும், தொழில் அதிபர் ராஜீவ் தோமர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குறிப்பாக, ஃபேஸ்புக்கில் நேரலையில் விஷம் குடிக்கும் போது பேசிய தொழில் அதிபர் ராஜீவ் தோமர், “எனக்கு பேச சுதந்திரம் இருக்கிறது” என்று குறிப்பிட்டு, இவ்வாறு பேசுகிறார்.

“நான் வாங்கிய கடனை அடைப்பேன். நான் இறந்தாலும் கடனை செலுத்துவேன். ஆனால், இந்த வீடியோவை முடிந்த வரை அனைவரும் பகிருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். 

நான் தேச விரோதி அல்ல. ஆனால், எனக்கு நாட்டின் மீது நம்பிக்கை இருக்கிறது. நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் இதனை சொல்ல விரும்புகிறேன். 

பிரதமர் அவர்களே, நீங்கள் சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் நலன் விரும்புபவர் அல்ல. உங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளுங்கள். ஜிஎஸ்டி வரியால், நான் மிக கடுமையாக பாதிக்கப்பட்டேன்” என்று, அந்த தொழில் அதிபர் கண்ணீருடன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவத்துள்ள பிரியங்கா காந்தி, “பாக்பத்தில் தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி தற்கொலை முயற்சி மற்றும் அவரது மனைவியின் மரணம் பற்றி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன் என்றும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது அனுதாபங்கள்” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், “ராஜீவ் ஜி விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றும், உ.பி முழுவதும் சிறு வணிகர்கள், வியாபாரிகள் மத்தியில் இது போன்ற துயரங்களை நாங்கள் காண்கிறோம்” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். 

குறிப்பாக, “பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் பொது முடக்கம் ஆகியவை பொது மக்களை மிக கடுமையாக பாதித்து உள்ளன” என்றும், பிரியங்கா காந்தி கவலையுடன் கூறியுள்ளார்.