கர்நாடகாவில் பர்தா அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்கில் 3 நீதிபதிகள் அடங்கிய கர்நாடக ஐகோர்ட்டு அமர்வு இன்று விசாரிக்கிறது.

karnataka highcourt

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.  இதனால் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். 

இந்நிலையில், ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சிலர் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்தது. இது குறித்து கர்நாடக உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா கூறும்போது, "மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வருவது வழிபாடு நடத்த அல்ல. மத அடையாளங்களை வழிபாட்டு தலங்களுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். ஹிஜாப், காவித் துண்டு ஆகியவற்றை கல்லூரிக்குள் அனுமதிக்க முடியாது. நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒன்றுபட்ட மனோநிலைக்கு வர வேண்டும். அனைத்து மாணவர்களும் பாரத மாதாவின் பிள்ளைகள் என்பதை உணர வேண்டும்" என்றார். மேலும் மாணவர்கள் உரிய பள்ளி சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்ற கர்நாடக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு கர்நாடக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. "நான் சட்டபேரவைக்கே ஹிஜாப் அணிந்து செல்கிறேன்; என்னை தடுக்க அவர்களுக்கு துணிச்சல் உள்ளதா?" என கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கனீஸ் ஃபாத்திமா சவால் விடுத்தார். முன்னாள் முதல்வர் குமாரசாமி, "ஹிஜாப் தடையால் பெண் கல்வி பாதிக்கும்" என்று கருத்து தெரிவித்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்திய எல்லையை தாண்டி பிற நாடுகளிலும் இதுகுறித்து பேசப்படுகிறது. இதற்கிடையே முஸ்லிம் மாணவிகள் 6 பேர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து, தங்களை ஹிஜாப் அணிந்து அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட கோரியுள்ளனர். இந்த மனு மீது நேற்று முன்தினம் ஐகோர்ட்டில் தனி நீதிபதி கிருஷ்ண தீட்சித் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. முதல் நாளில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் தேவதத் காமத் ஆஜராகி வாதிட்டார்.

இந்நிலையில் அவர் வாதிடுகையில், ஆடை அணிவது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை என்றும், இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு அவற்றுக்கு எதிரானது என்றும் வாதிட்டார். அரசின் உத்தரவை ரத்து செய்யுமாறும் வலியுறுத்தினார். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.  அதன்படி நேற்று மதியம் 2.30 மணியளவில் இந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 

மேலும் இந்நிலையில் இது குறித்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது கர்நாடக மாநில அரசின் சீருடை திட்டத்தை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பார்கள் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் கர்நாடகாவில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய வழக்கில் இன்று மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை செய்கிறது. இன்றைய விசாரணைக்கு பின்னர் ஹிஜாப் அணியும் விவகாரத்தில் முக்கிய தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹிஜாப் விவகார வழக்கு தொடர்பாக எனது தலைமையில் நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜிவுல்லா முகைதீன் ஆகிய 3 நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று மதியம் 2.30 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.