உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்ற லக்கிம்பூர் கேரி சம்பவத்தில், கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் ஆஷிஷ் மிஸ்ராவின் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக நீதிமன்றம் கூறிய விளக்கமும் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லகிம்பூரில் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி அன்று விவசாயிகள் நடத்திய பேரணியின் போது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 அப்பாவி விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையத்து, அங்கு நடைபெற்ற கலவரத்தையும் சேர்த்து மொத்தமாக 9 பேர் வரை உயிரிழந்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் யாவும் தொடர்ந்து மிக கடுமையாக குரல் கொடுத்த நிலையில், மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனாலும், “இந்த விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பாஜக தலைமையிலான மத்திய அரசு எதுவும் செய்யவில்லை” என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வந்தது. எனினும், அவர் மத்திய அமைச்சராக தொடர்ந்து வருகிறார்.

இது தொடர்பான வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் முன்னதாக ஜாமீன் வழங்கி உள்ளது. 

அத்துடன், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பிய நீதிமன்றம், போலீஸ் விசாரணையையும் நீதிமன்றம் நிராகரித்து உள்ளது.

அதுவும், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு உட்பட ஆஷிஷ் மிஸ்ரா மீது போலீசார் பட்டியலிட்ட குறிப்பிட்ட சில குற்றச்சாட்டுகள் குறித்தும், அலகாபாத் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

இது தொடர்பாக பேசிய நீதிபதி, “போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின்படி, ஆஷிஷ் மிஸ்ரா நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டு உள்ளது. எனினும், போலீசாரின் விசாரணையில், உயிரிழந்தோரின் உடலில் ​​அத்தகைய துப்பாக்கி காயங்கள் எதுவும் இல்லை என்றும், இறந்தவர்கள் அல்லது காயமடைந்த நபரின் உடலில் காயங்கள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை” என்றும், சுட்டிக்காட்டினார்.

மேலும், “கார் டிரைவரை விவசாயிகள் மீது மோதத் தூண்டியதாக ஆஷிஷ் மிஸ்ரா மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது என்றால், கார் ஒட்டுநர் உட்பட இருவர் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டனர் என்றும், சம்மன் அனுப்பப்பட்ட உடன் ஆஷிஷ் மிஸ்ரா விசாரணை அதிகாரி முன் ஆஜரானார்” என்றும், நீதிபதியே கருத்து தெரிவித்தது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதே போல், “இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், இதனால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கலாம்” என்றும், நீதிபதியே இப்படி ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, “காரில் பயணித்த மூவர் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டதைக் கண்டு, கண்களை மூடிக்கொள்ள முடியாது என்றும். இந்தச் சம்பவத்தின் புகைப்படங்கள் போராட்டக்காரர்களின் மிருகத் தனத்தை தெளிவாகக் காட்டுகிறது” என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதே நீதிபதி குற்றம்சாட்டி உள்ளார். 

“இந்த சம்பவத்தில் 4 பேர் மீது மட்டுமே குற்றம் சாட்டப்பட்டு உள்ளது என்றும், பாஜக தொண்டர்களைத் தாக்கியவர்களின் விவரங்களைப் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் அளிக்க வேண்டும்” என்றும், நீதிபதி உத்தரவிட்டார்.

மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள இந்த சம்பவம், அரசியல் ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மிக முக்கியமாக, விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்ற மத்திய அமைச்சர் மகனுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கியதுடன், “இது தொடர்பான ஆதராம் இல்லையென” சுற்றி வளைத்து சொன்ன நீதிபதியின் விளக்கத்திக்கத்தையும், நாடு முழுவதும் உள்ள எதிர்க் கட்சியினர் மிக கடுமையாக விமர்சித்து பேசி வருகின்றனர். 

முக்கிமயாக, மத்திய அமைச்சர் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைச் மிக கடுமையாக சாடியுள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள், “மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா, உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று, மீண்டும் வலியுறுத்தி உள்ளனர்.