பர்தா அணிந்து வந்த மாணவியை சுற்றி வளைத்த இளைஞர்கள் “ஜெய் ஸ்ரீராம்” கோஷம் எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஹிஜாப் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, கர்நாடகா மாநிலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த காலங்களில் வட மாநிலங்களில் நடைபெற்ற இந்த சம்பவம், இந்த முறை தென்னிந்தியாவான கர்நாடகா மாநிலத்தில் தான் அரங்கேறி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடகாவில் “ஹிஜாப் விவகாரம்” மிகப் பெரிய புயலை கிளப்பியிருக்கிறது.

அதாவது, கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இஸ்லாமிய பெண்கள் சிலர் எப்போதும் போல், பர்தா அணிந்து வந்திருக்கிறார்கள். ஆனால், இஸ்லாமிய மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு ஒரு தரப்பைச் சேர்ந்த குறிப்பிட்ட மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பள்ளி கல்லூரிகளில் படித்து வரும் இஸ்லாமிய மாணவர்கள், கடும் எதிர்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், மாணவர்களில் பொதுவாக இருப்பவர்கள் இஸ்லாமியா மாணவிகளும், அவர்களுக்கு ஆதரவாகவும் போராட்டம் உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால், கர்நாடகாவில் உள்ள கல்வி சாலைகள் யாவும் முற்றிலும் தனது அமைதியை இழந்து, குழப்பத்தாலும் சூழ்சியாலும் சிக்கித் தவித்து திணறிக்கொண்டு இருக்கின்றன. 

குறிப்பாக, இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக நாள் முழுவதும் “ஜெய் ஸ்ரீராம்”, “ஜெய் பீம்” உள்ளிட்ட கோஷங்கள் தான் பல கல்லூரிகளில் தொடர்ந்து ஒலித்து வருகின்றன. 

அத்துடன், இந்த ஹிஜாப் விவகாரம் குறித்த வழக்கை, கர்நாடகா உயர் நீதிமன்றம் இன்று விசாரித்து வரும் நிலையில், இந்த பிரச்னையை முன் வைத்து நடைபெறும் போராட்டங்கள் அந்த மாநிலத்தில் தற்போது புதிய உச்சத்தை சந்தித்து வருகின்றன.

மாணவியை காவித் துண்டு அணிந்திருந்த மாணவர்கள் சூழ்ந்து கொண்டு 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மிக முக்கியமாக, கர்நாடகாவில் உள்ள மாண்டியா கல்லூரியில் இன்று காலை ஒரு இஸ்லாமிய மாணவி ஒருவர், வழக்கம் போல் பர்தா அணிந்து கொண்டு, கல்லூரிக்கு வந்து உள்ளார். 

அப்போது, காவித் துண்டை அணிந்திருந்த 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள், அங்கு வந்து அந்த மாணவியை திடீரென்று சூழ்ந்துக்கொண்டு உள்ளனர். இதனால், அந்த மாணவி செய்வதறியாது திகைத்து நிற்கவே, “ஜெய் ஸ்ரீராம்” கோஷம் எழுப்பி, அந்த மாணவியை சுற்றி வளைத்தனர். 

கன நேரத்தில், “என்ன நடக்கிறது?” என்று, புரியாமல் கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, பின்னர் சட்டடென்று சுதாரித்துக்கொண்டு, சிறிதும் அச்சப்படாமல், தனது பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாத அந்த மாணவி, அந்த மாணவர்களிடம் பதிலுக்கு “அல்லா ஹு அக்பர்” என்று, சத்தம் போட்டு கோஷமிட்டு உள்ளார். 

ஆனாலும், அந்த இஸ்லாமிய மாணவியை விடாமல் அந்த இந்து மாணவர்கள் துரத்திச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்போது, இதனைக் கண்ட அந்த கல்லூரி நிர்வாகிகள், உடனடியாக வந்து அங்கிருந்த மாணவர்களை கலைந்து போக செய்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

அதே போல், உடுப்பியில் உள்ள மகாத்மா காந்தி நினைவுக் கல்லூரியில் இரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் இடையே ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கடும் மோதல் உருவாகும் சூழல் எழுந்தது. 

இதன் காரணமாக, உடனடியாக அங்கு போலீசார் வந்து மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

மிக முக்கியமாக, கர்நாடகாவின் தாவண்கரே மாவட்டத்தில் ஹிஜாப் தொடர்பான போராட்டத்தில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவுமு் தகவல்கள் வெளியாகி உள்ளன. மாணவர்களின் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், “பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளித்து” அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில் தான், “மத்தியப் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வர அனுமதி இல்லை” என்று, அந்த மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்தர் சிங் பார்மர் தற்போது கூறியுள்ளார். 

இது தொடர்பாக இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஹிஜாப் என்பது பள்ளிச் சீருடைகளில் ஒரு அங்கம் கிடையாது என்றும், ஹிஜாபை பள்ளிகளில் தடை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து” என்றும், தெரிவித்து உள்ளார். 

“மத்தியப் பிரதேசத்தில் பள்ளிச் சீருடை தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது என்றும், அந்தக் குழுவின் பரிந்துரைக்கேற்ப இந்த விவகாரத்தில் மாநில அரசு உத்தரவு பிறப்பிக்கும்” என்றும், அவர் கூறினார். இந்த விவகாரம், இந்தியா அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.