1941-ல் பிறந்த அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் 1970-ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார். தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் நல்ல புலமை பெற்றவர் துப்யான்ஸ்கி. தமிழைச் சரளமாகப் பேசக்கூடியவர்.

இவர் கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்தார். 79 வயதான அவர் கொரோனாவால் உயிரிழந்தது, மக்களிடையே மிகப்பெரிய வேதனையை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இறந்ததை அடுத்து, ``ரஷ்ய நாட்டு தமிழறிஞர் துப்யான்ஸ்கியின் இறப்பு தமிழ் மொழி ஆய்வுத் தளத்தில் பேரிழப்பாகும்" என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

``செம்மொழி மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்த ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் - ஆய்வாளர் - பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி கொரோனா பெருந்தொற்றால் மறைவெய்தியது ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.

பொன்னியும்- வைகையும் - பொருநையும் இன்னும் பல ஆறுகளும் பாய்ந்து வளம் செழிக்க செய்த பண்பாட்டினை - இலக்கியத்தினை - வரலாற்றினை வால்கா நதி பாயும் ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்றுவித்தவர் அறிஞர் துப்யான்ஸ்கி.

சோவியத் யூனியனில் இருந்த பகுதிகள் தனித்தனியாகப் பெரிந்தபிறகு, அங்கே தமிழ்மொழி சார்ந்த பதிப்புகள் குறைந்து போன நிலையில் , பேராசிரியர் துப்யான்ஸ்கி தன் சொந்த முயற்சியாலும் ஆய்வுப் பார்வையாலும் தமிழ் வளர்க்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது போற்றுதலுக்குரியது.

அரைநூற்றாண்டு காலமாக தமிழ் ஆய்வுப் பணியை மேற்கொண்டு , புதிய பார்வையுடன் பல கட்டுரைகளை வழங்கிய பேராசிரியர் துப்யான்ஸ்கி வாயிலாகத் தமிழ் மொழியை அறிந்துக் கொண்ட மேல்நாட்டவர் ஏராளம். 2010 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தலைமையிலான கழக ஆட்சியில் கோவையில் நடைபெற்ற செம்மொழி ஆய்வு மாநாட்டில் பங்கேற்று, தொல்காப்பியம் குறித்த ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்து, தலைவர் கலஞரின் அன்பைப் பெற்றவர்.

 பேராசிரியர் துப்யான்ஸ்கியின் இறப்பு தமிழ் மொழி ஆய்வுத் தளத்தில் பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு தி.மு.க தலைவர் என்ற முறையிலும் , கலைஞரின் மகன் என்ற முறையிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேராசியர் அலெக்ஸாண்டர் துயான்ஸ்கி மேற்கொண்ட பணிகளைத் தொடர்ந்திடச் செய்வதே அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்” 

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலினை போலவே, கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார். அதில், 'ரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி, மாஸ்கோவில் மறைவுற்றார். வால்காவோடு வைகையை இணைத்தவருக்கு எங்கள் புகழ் வணக்கம். இது ஈடுசெய்தாக வேண்டிய இழப்பு. செய்தால்தான் துப்யான்ஸ்கியின் உயிர் ஓய்வுறும். யார் முன்வரினும் எங்கள்  உறுதுணையும் உறுபொருளும் உண்டு' என்று குறிப்பிட்டுள்ளார்.