நண்பரின் மகளுக்கு பாலியல் தொல்லை!
By Aruvi | Galatta | 04:36 PM
கோயம்புத்தூரில் நண்பரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர், போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த குமாருக்கு, இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குமாரின் மகள், அங்குள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இதனிடையே, குமார் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும்போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 35 வயதான அருண்குமார் என்பவர், நட்பாக அறிமுகமாகி உள்ளார்.
இதனையடுத்து அருண் குமார், அடிக்கடி குமாரின் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி குமார் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த நேரம் பார்த்து குமார் வீட்டிற்கு வந்த அருண்குமார், வீட்டில் யாரும் இல்லாத சுழலலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
பின்னர், சிறுமியிடம் இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார். இதனால், பயந்துபோன சிறுமி தனது பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார்.
ஆனால், சிறுமி பள்ளிக்கூடம் செல்லும்போதெல்லாம், அருண் குமார் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதனால், ஒரு நாள் விபரீதம் ஏற்படும் என்று பயந்துபோன சிறுமி, தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த புகாரை ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால், அருண் குமார் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, சிங்காநல்லூர் பகுதியில் நண்பரின் மகளுக்கு, சிறுமி என்றும் பார்க்காமல் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.