“ஜூன் 9 ஆம் தேதி வரை முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்யக்கூடாது என்றும், வழக்கு குறித்து தமிழ் நாடு காவல் துறை பதிலளிக்க வேண்டும்” என்றும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியன் உத்தரவிட்டு உள்ளார்.
 
கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுக்கு எதிராக, கடந்த வாரம் துணை நடிகை சாந்தினி, காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், “அதிமுக முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன், கடந்த 5 ஆண்டுகளாக என்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்து, என்னை மோசடியாக ஏமாற்றி உள்ளதாக” பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த புகாரின் படி, சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில், “திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறும் புகார்தாரர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்த புகாரை அளித்து உள்ளதாகவும், தனக்கு எதிராகக் கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், “தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகாரை அவர் அளித்து உள்ளதாகவும், சமுதாயத்தில் பிரபலமானவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலாக நடிகை செயல்பட்டு வருவதாகவும், மலேஷியாவில் இது போல பலரை அவர் மோசடி செய்து உள்ளதாகப் புகார்கள் உள்ளன” என்றும், தனது மனுவில் மணிகண்டன் கூறியிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகை சாந்தினி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று 
மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் தான், மணிகண்டன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு இன்று நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, “மணிகண்டனுக்கு, முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருப்பதாக” நடிகை சாந்தினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், “மணிகண்டன் மீதான விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால், முன் ஜாமின் வழங்கக் காவல் துறை தரப்பிலும் எதிர்ப்பு” தெரிவிக்கப்பட்டது.

ஆனால், “நடிகை சாந்தினி சார்பில் தாக்கல் செய்த மனு பார்வைக்கு வராததால், வழக்கை வரும் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அதற்குள் புகாரளித்த நடிகையின் ஆட்சேபனை மனுவைப் பட்டியலிடவும்” நீதிபதி உத்தரவிடப்பட்டது. 

குறிப்பாக, “ஜூன் 9 ஆம் தேதி வரை முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்யக்கூடாது என்றும், வழக்கு குறித்து தமிழ் நாடு காவல் துறை பதிலளிக்க வேண்டும்” என்றும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியன் உத்தரவிட்டார். இதனால், இந்த வழக்கில் அடுத்தடுத்து திருப்பத்திற்கு மேல் திருப்பம் ஏற்பட்டுக்கொண்டு இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.