மகாராஷ்டிராவில் பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை!

மகாராஷ்டிராவில் பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை! - Daily news

சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களின் பிரிவு 7 சட்டம் 2003 இன் கீழ் (விளம்பரம் மற்றும் வர்த்தக மற்றும் வர்த்தக உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்துதல்} சிகரெட் மற்றும் பீடிகளை சில்லறை விற்பனை செய்வதற்கு மகாராஷ்டிர அரசு தடை விதித்துள்ளது.
 
இதுதொடர்பாக மகாராஷ்டிர அரசின் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சிகரெட் மற்றும் இதர புகையிலை தயாரிப்புகள் (தடுப்பு) சட்டத்தின் 7(2)-வது பிரிவின் கீழ் சிகரெட் மற்றும் பீடிகளை சில்லறையாக விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. புகைப் பழக்கத்தால் புற்றுநோய் மற்றும் இதயம் தொடர்பான நோய் ஏற்படுகிறது. எனவே, இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சிகரெட், பீடி பாக்கெட்களில், புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகளை சித்தரிக்கும் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
 
புகைப்பிடித்தலின் தீமை மற்றும் புற்றுநோய் குறித்து எச்சரிக்கும் படங்கள் இடம்பெற்றிருக்கும் பீடி, சிகரெட் பாக்கெட்டுகளை அப்படியே விற்காமல், தனித்தனியே விற்பதால் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த இயலாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் அம்மாநில சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பிரதீப் வியாஸ் கையெழுத்திட்டார். 

இதன்மூலம் சிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு தடை விதித்த முதல் மாநிலம் என்ற பெருமை மகாராஷ்டிராவுக்கு கிடைத்துள்ளது.
 
இந்த புதிய உத்தரவு இளைஞர்களிடையே புகைப் பழக்கத்தைக் குறைக்க உதவும் என்று டாடா மெமோரியல் மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பங்கஜ் சதுர்வேதி கூறினார். “இந்தியாவில் புகையிலை பழக்கம் 16 முதல் 17 வயதுடைய இளைஞர்களிடம் இருந்து ஆரம்பிக்கிறது.முழு பாக்கெட்டை வாங்க நிதி ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் ஒரு சில சிகரெட்டுகளை வாங்குகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

சிகரெட் மீதான வரிகளில் 10 சதவிகிதம் அதிகரிப்பு புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையில் 8 சதவிகிதம் வீழ்ச்சியடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஒரு தனி சிகரெட்டை வாங்க மக்கள் அனுமதிக்கப்பட்டால், அதிக வரிகளின் விளைவை அவர்கள் உணர மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய புகையிலை இளைஞர் கணக்கெடுப்பு 2016இன்படி, மகாராஷ்டிரா மாநிலம், நாட்டில் மிகக் குறைந்த புகைபிடித்தல் விகிதத்தைக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும்கூட, தற்போது பல இடங்களில் அவை சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment