கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்,  2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரியாக ரூபாய்  1,05,155 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 19,193 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 25,411 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 52,540 கோடியும் (சரக்குகளின் இறக்குமதியின் மூலம் பெறப்பட்ட ரூபாய் 23,375 கோடி உட்பட), செஸ் வரி ரூபாய் 8,011 கோடியும் (சரக்குகளின் இறக்குமதியின் மூலம் பெறப்பட்ட ரூபாய் 932 கோடி உட்பட) அடங்கும்.

ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து வழக்கமான பைசல் தொகையாக மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூபாய் 25,091 கோடியையும் மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூபாய் 19,427 கோடியையும் அரசு வழங்கியுள்ளது. 2019 அக்டோபர்  மாதத்துடன் ஒப்பிடுகையில் 2020 அக்டோபர் மாதத்தின் வருவாய் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இந்த அக்டோபர் மாதத்தில் ரூபாய் 6,901 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 13% அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.