2022 IPL தொடரின் இன்றைய போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி விளையாடுவதால், விராட் கோலியின் வெறித்தனமான ஆட்டத்தை காண அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

2022 IPL கிரிக்கெட் தொடரின் 15 வது சீசனானது, கடந்த 26 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்த சீசனில் கலந்துகொண்ட 10 அணிகளும் தலா ஒரு முறை விளையாடி உள்ளன.

அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் முதல் அனைத்து அணிகளும் 2 வது ரவுண்ட் வர உள்ளன. அதன் படி, இன்று நடைபெறும் 6 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி, அபார வெற்றி பெற்று இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

அதே போல், பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியிடம் போராடி தோல்வி அடைந்தது. இதனால், பஞ்சாப்பிடம் செமத்தியான  அடியிலிருந்து மீளும் நம்பிக்கையில் அந்த அணி இன்று களம் இறங்க உள்ளது.

கொல்கத்தா ஃபார்ம் எப்படி?

- சென்னை அணிக்கு எதிரான முதல் நாள்போட்டியில் கடைசி 3 ஓவர்களில் கொல்கத்தா அணியானது கிட்டதட்ட 47 ரன்களை வாரி வழங்கி இருந்தது. இதனால், பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், அந்த தவறை சற்று கவனமாகவே கொல்கத்தா அணி கையாள வேண்டி உள்ளது.

- உமேஷ் யாதவின் சூப்பரான பவுலிங் ஃபார்ம் அந்த அணிக்கு புது நம்பிக்கையை தந்து உள்ளது.

- சுழற்பந்து வீச்சாளர்களான சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி இருவருமே எதிர் அணியின் ரன் வேகத்தை தடுக்ககூடியவர்கள்.

பெங்களூரு ஃபார்ம் எப்படி?

- ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் புதுவிதமான உத்வேகத்துடன் காணப்படுகிறார்.

- கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி, எந்த கமிட்மெண்ட்டும் இல்லாமல் இருக்கும் விராட் கோலியை கட்டுப்படுத்தவது என்பது எதிர் அணிக்கு பெரும் சவலான ஒன்று. இதனை, இந்த சீசனில் அவரது முதல் போட்டியிலேயே நன்றாகத் தெரிந்தது.

- புது மாப்பிள்ளை மேக்ஸ்வெல் இன்னும் அணிக்கு திரும்பாதது ஒரு இழப்பாகவே பார்க்கப்படுகிறது.

- பெங்களூரு அணியானது, தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 205 ரன்களை விளாசி தள்ளிய போதிலும், சற்று மோசமான பவுலிங் காரணமாக தோல்வியை தழுவியது என்றே விமசர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனால், முதல் வெற்றியை பதிவு செய்ய பெங்களுரு அணியும், தங்களது வெற்றியை தொடர கொல்கத்தா அணியும் இன்றைய 6 வது நாள் போட்டியில் போராடும் என்றே கூறப்படும் நிலையில், இந்த போட்டியானது 7.30 மணிக்கு தொடங்குகிறது. 

முக்கியமாக, நடப்பு சீசனை பொறுத்தவரையில், இந்த இரு அணிகளுமே பேட்டிங்கில் பலம் பொருந்தி உள்ளன. இப்படியாக, இரு அணிகளும் மிகவும் வலுவான வரிசையைக் கொண்டு இன்று களம் காண்பதால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் அடிப்பதை இலக்காகக் கொண்டிருக்கும் என்றும், இப்படியான இலக்கே வெற்றிக்கு வித்திடும் என்றும் கூறப்படுகிறது.

இதனால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.