ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலி ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, இளம் பெண் ஒருவருடன் ஆபாச வீடியோவில் இருப்பது போன்று, உள்ளூர் செய்தி தொலைக்காட்சியில் செய்திகள் வெளியானது.

அதாவது, கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருக்கும் பாஜகவை சேர்ந்த 60 வயதான ரமேஷ் ஜர்கிஹோலி, அங்குள்ள ஒரு ஹோட்டல் விடுதி ஒன்றில் அரைகுறை ஆடையுடன் இளம் பெண்ணுடன் ஒருவருடன் ஆபாசமான முறையில் இருக்கும் வீடியோ மற்றும் வாட்ஸ் ஆப்பில் பேசிக்கொண்ட ஆடியோ ஆதாரங்கள் வெளியாகி இருக்கின்றன.

குறிப்பாக, நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருக்கும் பாஜகவை சேர்ந்த 60 வயதான ரமேஷ் ஜர்கி ஹோலி யார் என்றால், “கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து, எடியூரப்பா தலைமையிலான ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்தவர் ஆவர். அதன் காரணமாகவே,  எடியூரப்பா இவருக்கு முக்கிய அமைச்சர் பதவியும் வழங்கினார்.

இப்படியான சூழ்நிலையில் தான், வட கர்நாடகத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், “அணைகள் குறித்து ஆவணப் படம் எடுக்கப் போவதாகவும், அதற்கு அரசு சார்பில் உதவி செய்யுமாறும்” அமைச்சர் ஜர்கிஹோலியை அணுகி இருக்கிறார். 

அப்போது, அந்தப் பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறிய அமைச்சர் ஜர்கி ஹோலி, அவருடன் பலமுறை பாலியல் உறவு வைத்துக்கொண்டு உள்ளார். 

ஆனால், அவர் வாக்குறுதி அளித்த படி அரசு வேலையும் அவர் வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாகத் தெரிகிறது. இதனால், வேலை விசயமாக அந்த இளம் பெண், சம்மந்தப்பட்ட அமைச்சரிடம் மீண்டும் கேட்டிருக்கிறார். ஆனால், அவர் மெத்தனமாகப் பதில் கூறியதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில், “தாங்கள் இருவரும் தனிமையில் இருந்த காட்சிகள் அடங்கிய வீடியோ பெண்ணிடம் இருப்பதை அறிந்துகொண்ட அமைச்சர் ஜர்கி ஹோலி, அந்த வீடியோவை தர வேண்டும்” என்று அந்த இளம் பெண்ணிடம் கேட்டிருக்கிறார்.

“அப்படி, அந்த வீடியோவை தர மறுத்தால், உன் குடும்பத்தையே அழித்து விடுவேன்” என்று, அந்த இளம் பெண்ணுக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்துச் சென்று உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், தனது குடும்பத்தினரும், அமைச்சரின் இந்த மிரட்டல் குறித்து, கர்நாடக மக்கள் உரிமை போராட்ட சங்கத் தலைவர் தினேஷ் கல்லஹள்ளியிடம் தெரிவித்து உள்ளார். இதனையடுத்தே, இந்த விசயம் வெளி உலகிற்குத் தெரிய வந்தது.

அதன் படியே, இளம் பெண்ணுடன் பாஜக அமைச்சர் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படும் ஆபாச வீடியோ, உள்ளூர் செய்தி சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் தினேஷ் கலாஹள்ளி பெங்களூருவில் உள்ள கப்பன் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி இன்று தன்னுடைய ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு அனுப்பி உள்ளார். 

மேலும், “என் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும், இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபணமாகும் என்றும்” அவர் கூறி உள்ளார்.

அதே நேரத்தில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியின் ஆபாச வீடியோ வெளியாகி தற்போது பாஜக தலைமைக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.