கோவை, சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் மதன்குமார் (28). இவர் தனியார் வங்கியில் பணியாற்றிவந்தார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மதன்குமார் ஆன்லைனில் மூழ்கியிருந்திருக்கிறார். இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்.

ஆரம்பத்தில் பணம் நிறைய சம்பாதித்த மதன், பிறகு தோற்றிருக்கிறார். முக்கியமாக, ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அடிமையே ஆகிவிட்டார். இதனால், ஆன்லைனில்விட்ட பணத்தை மீண்டும் பிடிப்பதற்காகக் கடன் வாங்கி விளையாடியிருக்கிறார்.

ஆனால், தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்த மதன்குமார் மனவிரக்தியில் இருந்திருக்கிறார். இதையடுத்து, மதன்குமார் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார். தொடர்ந்து மன உளைச்சலில் இருந்தவர், வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து புடவையில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம், தமிழக முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவரைப் போலவே, புதுச்சேரி மாநிலத்தில் விஜயகுமார் என்ற நபர் அண்மையில் ஆன்லைன் ரம்மி விலையாட்டில் 40 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்ததுடன், தற்கொலையும் செய்துகொண்டார். இந்தநிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்.

மேலும், ``மாநில அரசின் கீழ் வராதததால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை மத்திய அரசு தான் தடைவிதிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் ரம்மி விளையாட்டில் வென்றதாக வரும் விளம்பரத்தையும் தடைசெய்ய வேண்டும்" என்றும் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் இறப்புகள் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று (அக்டோபர் 31) அறிக்கையொன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :

``கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மதன்குமார் என்ற 28 வயது இளைஞர் தனியார் வங்கியில் பணி செய்து வந்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காலத்தில்   வீட்டில் இருந்த அவர், பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடத் தொடங்கினார். தொடக்கத்தில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் அதிக பணம் சம்பாதித்த மதன்குமார்,  ஒரு கட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டார். முதலில் லாபம் சம்பாதித்த அவர், பின்னர் தன்னிடமிருந்த பணம் முழுவதையும் இழந்து விட்டார். அப்போதும் ஆன்லைன் சூதாட்டம் என்ற மோகினிப் பிசாசின் பிடியிலிருந்து மீள முடியாத அந்த இளைஞர், தமது நண்பர்களிடமிருந்து கடன் வாங்கி சூதாடியிருக்கிறார். ஒரு கட்டத்தில் லட்சக்கணக்கில் கடன் சேர்ந்து விட்டதால், அதை சமாளிக்க முடியாமல் மதன்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்துள்ளன.

இவற்றில் எதுவுமே புதிய தகவல் இல்லை. இதற்கு முன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி  தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு என்ன நடந்ததோ, அது தான் மதன்குமாருக்கும் நடந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தின் வடிவமைப்பே அது தான். ஆன்லைன் சூதாட்டம் என்பது ஒரு மாயவலை.   மின்னஞ்சல் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும் ஆன்லைன் சூதாட்டம் விளையாட வரும்படி  சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அழைப்பு விடுக்கும்; ஊடகங்கள் மூலமாகவும் பிரபலங்களைக் கொண்டு விளம்பரங்கள் செய்யப்படும்; சிறப்பு போனசாக ரூ.15,000 வரை வழங்கப்படும் என்றும், அதைக் கொண்டு சூதாட்டம் விளையாடி பணத்தை வெல்லலாம் என்றும் ஆசை காட்டப்படும். அவற்றை நம்பி, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீளவே முடியாது. தங்களிடமுள்ள பணம் முழுவதையும் இழந்து, கடன் வாங்கியும் சீரழிவதைத் தடுக்கவே முடியாது. அவ்வாறு பணத்தை இழந்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தக் கொடுமை தொடர்கிறது.

கடந்த 10 நாட்களில் மட்டும் புதுச்சேரி, மதுரை மேலூர், சென்னை செம்பியம் ஆகிய இடங்களில் மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இப்போது நான்காவது தற்கொலை நிகழ்ந்திருக்கிறது.  ஆன்லைன் சூதாட்டம் என்ற தீமையை உடனடியாக தடுக்காவிட்டால் தற்கொலைகளும், அதனால்  நடுத்தெருவுக்கு வரும் குடும்பங்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து விடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய வேண்டும் என்று கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாததால்,  தற்கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

பொது இடங்களிலோ, மன்றங்களிலோ பணம் வைத்து சூதாடினால் அது குற்றம் ஆகும். ஆனால், ஆன்லைன் சூதாட்டங்கள் இன்னும் குற்றமாக்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களே வலியுறுத்தியும் ஆன்லைன் சூதாட்டம் இன்னும் குற்றமாக்கப்படவில்லை; தடை செய்யப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டங்கள் மட்டுமின்றி,  கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்தும் பல ஆன்லைன் சூதாட்டத் தளங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவை இளைஞர்களை எளிதில் கவர்ந்து வீழ்த்துகின்றன. ஆன்லைன் சூதாட்டங்களையும், அதனால் ஏற்படும்  உயிரிழப்புகளையும் இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது. அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்"

என்று கூறியுள்ளார்.