11 அணிகள் பங்கேற்கும் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், முதல் போட்டியில் கொல்கத்தா - கேரளா அணிகள் மோதுகின்றன. 

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா என்னும் வைரஸ் பெருந் தொற்றுக்கு இடையே, ஆண்டு தோறும் இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முடிந்த சில வாரங்களே ஆகி உள்ள நிலையில், தற்போது இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இன்று முதல் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டிகளும் தொடங்குகின்றன.

இந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியானது, ஐபிஎல் போட்டியை போலவே இந்திய வீரர்களுடன் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் இணைந்து பங்கேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த, இந்தியன் சூப்பர் லீக் போட்டியான ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியானது, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் நடக்கும் மிகப் பெரிய கால்பந்து திருவிழாவான இந்த போட்டியில், முதல் 3 ஆண்டுகளில் 8 அணிகளும், அதன் பிறகு 10 அணிகள் மட்டுமே கலந்து கொண்டு விளையாடி வந்தன. அதன் படி, முதலாவது சீசனில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2015 ஆம் ஆண்டில் சென்னையின் எப்.சி. அணியும், 2016 ஆம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2017 ஆம் ஆண்டில் சென்னையின் எப்.சி. அணியும், 2018 ஆம் ஆண்டில் பெங்களூரு எப்.சி. அணியும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடி, அனைவரது கவனத்தையும் பெற்றது.  

மேலும், கடந்த சீசனில் நடந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியானது, சென்னையின் எப்.சி. அணியை வீழ்த்தி 3 வது முறையாக சாம்பியன் பட்டத்தை, தனதாக்கிக்கொண்டது.

இந்த நிலையில், 2020 - 2021 இந்த ஆண்டுக்கான 7 வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர், இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் இந்த போட்டிகள், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெறுகின்றன. 

முக்கியமாக, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான போட்டிகள் அனைத்தும் ஒரே மாநிலத்தில் நடைபெறுகிறது. அதுவும், கோவாவில் ரசிகர்கள் இன்றி இந்த போட்டிகள் இந்த ஆண்டு அரங்கேறுகிறது. இதற்காக, அங்குள்ள பதோர்டா ஜவகர்லால் நேரு ஸ்டேடியம், பாம்போலிம் ஜி.எம்.சி. தடகள ஸ்டேடியம், வாஸ்கோ திலக் ஸ்டேடியம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றியே இந்த போட்டிகள் அனைத்தும் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சீசனுக்கான போட்டியில் 11 வது அணியாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஈஸ்ட் பெங்கால் அணி, புதிதாக இணைந்து இருக்கிறது.

இந்த கால்பந்தாட்ட போட்டியில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டி தொடருக்காக ஒவ்வொரு அணிகளும், புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து இருப்பதுடன், கடந்த மாதமே கோவா சென்று கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்துக்கு மத்தியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தொடரில் மொத்தம் 115 ஆட்டங்கள் இடம் பெறுகிறது. இது கடந்த ஆண்டை விட 20 ஆட்டங்கள் அதிகமாகும். ஜனவரி 11 ஆம் தேதி வரையிலான லீக் ஆட்ட அட்டவணை 

அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கொரோனா பரவல் தொடங்கிய 8 மாதத்துக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் முதலாவது பெரிய போட்டி இது வாகும். 

மேலும், பாம்போலிம்மில் உள்ள ஜி.எம்.சி. தடகள ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர் கொள்கிறது. 3 முறை சாம்பியனான கொல்கத்தா அணியானது, ராய் கிருஷ்ணா தலைமையில் களம் இறங்குகிறது. ராய் கிருஷ்ணா கடந்த சீசனில் 15 கோல்கள் அடித்து அசத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.