நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் இன்று முதல் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ள நிலையில், பின்பற்றாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

நாடு முழுவதும் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக இது வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இதனால், சாலைகளில் வாகனங்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும், இதன் காரணமாக, எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது என்றும், இவற்றுடன் பயணிகளின் நேரமும் வீணாகிறது என்றும் கூறப்பட்டு வந்தது.  

இப்படியான இந்த பிரச்சனையைத் தவிர்க்க மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் பாஸ்டேக் முறையை, கடந்த 2016 ஆம் ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டது. 

அத்துடன், அப்போதே “வங்கிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் இந்த பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் கிடைக்கும் என்றும், அதற்கான குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி, அந்த ஸ்டிக்கர்களை பெற்றுக்கொண்டு, வாகனத்தின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் ஒட்டிக்கொள்ள வேண்டும்” என்றும், அறிவுறுத்தப்பட்டது.

இதனால், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடிகளைக் கடக்கும் போது, நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு கருவி மூலம் அந்த வாகனத்துக்கான கட்டணம் தானியங்கி முறையில் அதற்கான கட்டணத்தைக் கழித்துக்கொள்ளும் என்றும், இதனால் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் அனைத்து பயணிகளும் பயணத்தைத் தொடரலாம் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பாஸ்டேக் முறைக்கு, வாகன உரிமையாளர்கள் மாறுவதற்குக் கால அவகாசம் அளிக்கும் வகையில், இதைக் கட்டாயம் ஆக்குவதற்கான தேதி அவ்வப்போது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. 

இந்த நிலையில் தான், இன்று 15 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் இந்த பாஸ்டேக் முறை கட்டாயம் ஆக்கப்படுவதாக மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அதிரடியாக அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாஸ்டேக் முறை 15 ஆம் தேதி முதல் கட்டாயம் ஆகிறது என்றும், அதன்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டண சுங்கச்சாவடிகளில் அனைத்து வழிகளும் பாஸ்டேக் வழிகளாக மாற்றப்படுகிறது” என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது.

அத்துடன், “வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாமலோ, அல்லது செயல்படக்கூடிய ஸ்டிக்கர் ஒட்டாமலோ அந்த வழிகளைக் கடக்கும் வாகனங்கள், அவற்றுக்கான கட்டணத்தைப் போல் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்” என்றும், அதில் கூறப்பட்டு உள்ளது.

“மின்னணு முறையில் கட்டணம் செலுத்துவதை ஊக்கப்படுத்தவும், காத்திருக்கும் நேரம், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், தடையற்ற பயணத்தை மேற்கொள்ளவும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.