“காதல் திருமணம் செய்த சகோதரியின் தலையை துண்டித்து செல்ஃபி”...   படத்தை பார்த்து அதேபோல் செய்த சிறுவன் கைது!

“காதல் திருமணம் செய்த சகோதரியின் தலையை துண்டித்து செல்ஃபி”...   படத்தை பார்த்து அதேபோல் செய்த சிறுவன் கைது! - Daily news

காதல் திருமணம் செய்த சகோதரியின் தலையை துண்டித்து சிறுவன் ஒருவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம் பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள வைஜாப்பூர் தாலுகாவில் உள்ள லட்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். அவரும் அதேப் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் கல்லுரியில் படித்தபோது காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. திருமணம் செய்துகொள்ள வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஜூன் மாதம் இளம்பெண்ணும், இளைஞரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர். 

அதைத் தொடர்ந்து பெண்ணின் பெற்றோர் மகளை காணவில்லை என்று வைஜாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதற்கிடையே எட்டு நாட்களுக்குப் பிறகு ஜூன் 21 அன்று காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு இருவரும் வைஜாப்பூர் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் இரு குடும்பத்தினரையும் அழைத்து சமாதானம் பேசியுள்ளனர். இதன் பிறகு அவர்களின் வாழ்க்கை பிரச்சினை ஏதும் இல்லாமல் நகர்ந்து சென்றது.

MAHARASHTRA TEENAGER MURDER

தன்னுடைய கணவருடன் லட்கான் கிராமத்தில் இளம்பெண் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பெண், கணவருடன் தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். மனைவியின் தாய் மற்றும் சகோதரனைச் சந்தித்த பிறகு, அவரது கணவர் உடல்நிலை சரியில்லாததால் வேறு அறைக்குச் சென்று படுத்துள்ளார். 

அதன் பிறகு அந்த பெண் சமையலறைக்கு சென்று எல்லாருக்கும் டீ தயாரித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது பெண்ணின் தாய் இளம்பெண்ணின் கால்களை பிடித்துக்கொள்ள, சகோதரரான 17 வயது சிறுவன், தனது சகோதரி என்றும் பாராமல் தான் வைத்திருந்த அரிவாளால் பெண்ணின் தலையை பின்னாடியில் இருந்து துண்டாக வெட்டியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த இளம் பெண் அங்கேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

இதன்பிறகு பெண்ணின் சகோதரனும், தாயும் இளம் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்ஃபி எடுத்த கொடூரமும் நிகழ்ந்துள்ளது.  இளம் பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து வந்து தாய் மற்றும் சிறுவனை கைது செய்தனர். இது பற்றி வைஜாபூரின் சப்-டிவிஷன் காவல் அதிகாரி கைலாஷ் பிரஜாபதி கூறுகையில், “பெண் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதால் சிறுவனும், அவனது தாயும் கோபத்தில் இருந்துள்ளனர். 

MAHARASHTRA TEENAGER MURDER

பெண்ணின் தலையை வெட்டி, அதனுடன் இருவரும் செல்ஃபி எடுத்தது போல் தெரிகிறது. செல்போனை கைப்பற்றி பார்த்தபோது அதில் செல்ஃபி படம் இல்லை. தாய்-மகன் இருவரும் படத்தை நீக்கியுள்ளனர் . அந்த செல்ஃபி புகைப்படம் ஒரு முக்கிய ஆதாரமாக இருப்பதால் அதை மீட்டெடுப்பதற்காக தடயவியல் ஆய்வுக்கு போலீசார் செல்ஃபோனை அனுப்பியுள்ளனர். மராத்தி படமான சைரத்தில் இதுபோன்று ஒரு ஆணவப்படுகொலை காட்சி வரும். அந்த படத்தை பார்த்து அதேபோல் சகோதரியை வெட்டியதாக கைதான சிறுவன் கூறியதாக” அவர் தெரிவித்துள்ளார். 

இளம்பெண்ணின் திருமணம் கலப்புத் திருமணம் இல்லையென்றாலும் கூட ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டதால், தன்னுடைய குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்களை கொலை செய்ய அந்தப் பெண்ணின் தாயும் அந்தச் சிறுவனும் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

அதற்காகவே இளம் பெண்ணின் தாயும், சகோதரனும் சமரசம் ஏற்பட்டதாக நடித்து அந்தப் பெண்ணை வீட்டிற்கு அழைத்துள்ளனர். மேலும் அந்த சிறுவன் சகோதரியின் கணவரையும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளான். ஆனால் அவர் தப்பித்துள்ளார். கொலை செய்யப்பட்ட இளம்பெண் கர்ப்பமாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment