அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3 ஆயிரம்! தமிழக அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3 ஆயிரம்! தமிழக அரசு அறிவிப்பு - Daily news

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனசாக 3 ஆயிரம் ரூபாய் உடன் அகவிலைப்படியையும் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழக அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 1.1.2022 முதல் 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கவும், C மற்றும் D பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் 8,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்து உள்ளதாக” தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் இந்த செய்தி குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.1.2022 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த 7.9.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110ன் கீழ், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்” என்றும், சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, “தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி, 1.1.2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட இன்றைய தினம் 28.12.2021 தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டு உள்ளார்” என்றும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

“இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டொன்றிற்கு தோராயமாக 8,724 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்” என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

இவற்றுடன், “பொங்கல் பரிசாக C மற்றும் D பிரிவுப் பணியாளர்களுக்கு  3 ஆயிரம் ரூபாயும், ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கிடவும், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்குப் பொங்கல் பரிசாக 1000 ரூபாயும், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாயும் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என்றும் கூறப்பட்டு உள்ளது.

“இதன் காரணமாக, அரசுக்கு தோராயமாக 169.56 கோடி ரூபாய் அளவிற்கு செலவினம் ஏற்படும்” என்றும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

“தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை உள்ள இந்தச் சூழ்நிலையிலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி, அகவிலைப் படியினை 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிடவும், C மற்றும் D பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் முதலமைச்சர் புதிதாக ஆணையிட்டுள்ளார்” என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment