18 வயது இளம் பெண் “அங்கிள்” என்று அழைத்த ஒரே காரணத்திற்காக, ஆத்திரமடைந்த 35 வயது நபர், அந்த பெண்ணை  சரமாரியாக தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரகண்ட் மாநிலம் உத்தம் சிங் மாவட்டத்தில் உள்ள சித்தர்கஞ்ச் டவுன் பகுதியில் 35 வயதான மோகித் குமார் என்பவர், அங்குள்ள காதிமா சாலையில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். 

இவருடைய கடைக்கு கடந்த 19 ஆம் தேதி நிஷா அகமது என்ற 18 வயது இளம் பெண் ஒருவர், பேட்மிண்டன் ராக்கெட் ஒன்றை வாங்குவதற்காக, அந்த கடைக்கு வருகை தந்திருக்கிறார்.

இதனையடுத்து,  பேட்மிண்டன் ராக்கெட்டை வாங்கிவிட்டு அந்த பெண் வீட்டிற்கு திரும்பிய நிலையில், அந்த ராக்கெட்டின் ஸ்டிரிங்குகள் உடைந்திருப்பதை கவனித்திருக்கிறார்.

இதனால், அந்த ராக்கெட்டினை மாற்றுவதற்காக மீண்டும் மோகித் குமார் கடைக்கு அந்த 18 வயதான இளம் பெண் சென்றிருக்கிறார்.

அப்போது, கடையில் அந்த கடைக்காரரான மோகித் இருந்த நிலையில், அவரிடம் அந்த 18 வயது இளம் பெண் “அங்கிள்” என்று, அழைத்து, தனது குறையை சொல்ல முற்பட்டிருக்கிறார்.

ஆனால், அந்த இளம் பெண் “அங்கிள்” என்று, அழைத்ததால், கடும் கோபம் அடைந்த அந்த 35 வயது கடைக்காரர் மோகித், அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.

இந்த தாக்குதலில், அந்த பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தமும் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த பெண்ணை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

அதன்படி, அந்த இளம் பெண் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும், மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து விரைந்து வந்த போலீசார், தாமாக முன்வந்து சம்மந்தப்பட்ட கடைக்காரர் மோகித் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்வம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.