என்றென்றும் மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் குறையாத அதே வேகத்தோடு ஸ்டைலோடு மக்களை மகிழ்வித்து வருகிறார். கடைசியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி வெளியீடாக கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கான வரவேற்பைப் பெற தவறியது. இருப்பினும் ஃபேமிலி ரசிகர்களால் அண்ணாத்த திரைப்படம் கொண்டாடப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் திரைக்கு வரும் போதும் திரையரங்குகளில் திருவிழா கோலம் கலை கட்டும்.

அந்த விதத்தில் அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வருகின்றன. முன்னதாக கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் படையப்பா திரைப்படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் அடுத்தடுத்த இரண்டு திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படத்தை ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்குவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மிக அழுத்தமான சமூக அக்கறை கொண்ட திரைப்படமாகவும் மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த அநீதிகளை அடிப்படையாகக் கொண்ட உண்மை சம்பவங்களை மையமாக வைத்து தயாரான திரைப்படமாகவும் மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்ற ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் முதல்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து இருப்பது இன்னும் எதிர்பார்ப்புகளைக் கூட்டி உள்ளது.

இதனிடையே லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் அவர்களின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடிக்கிறார். 3, வை ராஜா வை மற்றும் சினிமா வீரன்(டாக்குமென்ட்ரி) படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கிரிக்கெட் மற்றும் அதன் பின்னணியில் நடைபெறும் அரசியலை மையமாக வைத்து தயாராகும் திரைப்படமாக லால் சலாம் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்யும் லால் சலாம் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டில் லால் சலாம் திரைப்படத்தின் படப் பூஜை நடைபெற்ற நிலையில் தற்போது லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மார்ச் 7ம் தேதி லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ள படக் குழுவினர் அனைவருக்கும் ஹோலி பண்டிகைக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். மேலும் இதனை அறிவிக்கும் வகையில் லால் சலாம் திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இதோ…