ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே பெருமைப்பட வைத்த இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி, உள்ளூர் மேடை முதல் உலக மேடையான ஆஸ்கர் வரை இந்தியரின் திறமையை ஓங்கி ஒலிக்க வைத்தவர். தெலுங்கு சினிமாவில் மகாதீரா திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமடைந்த இயக்குனர் ராஜமௌலி அதன்பின் நான் ஈ படத்தின் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றார். அதை தொடர்ந்து இரண்டு பாகங்களாக உருவாகி ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சேர்த்த பாகுபலி திரைப்படம் மூலம் இயக்குனர் ராஜமௌலியின் பெயர் உலகளவில் உயர்ந்தது. பாக்ஸ் ஆபிஸிலும் விமர்சனத்திலும் ஒட்டு மொத்த திரையுலக ரசிகர்களின் ஆதரவை பெற்று தற்போது இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

இவரது முந்தைய திரைப்படமான ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் மூலம் எஸ் எஸ் ராஜமௌலியின் பெயர் உள்ளூர் மேடையில் இருந்து உலக மேடை வரை கோடி கட்டி பறந்தது. குறிப்பாக சமீபத்தில் நடந்து முடிந்த உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருதினை சிறந்த பாடல்களுக்கான பிரிவில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் பெற்றது. தற்போது ராஜமௌலி சர்வதேச அளவில் பிரபலமாக இருந்து வருகிறார். தற்போது ராஜமௌலி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கூட்டணியில் அட்டகாசமான சாகச திரைப்படத்தை இயக்கவுள்ளார். காடு சார்ந்து உருவாகும் #SSMB29 திரைப்படத்திற்கான முன் தயாரிப்பு பணியில் தற்போது ராஜமௌலி இறங்கியுள்ளார்.

உச்ச நடிகர்களுக்கு இணையான ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கும் ராஜமௌலி தற்போது ஓய்விற்காக தமிழ்நாடு முக்கிய சுற்றுலா பகுதிகளுக்கு சென்றுள்ளார். இது குறித்து அவர் சிறப்பு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“நீண்ட நாட்களாகவே தமிழ் நாட்டின் மத்திய பகுதிகளுக்கு செல்ல விரும்பினேன். அதன்படி இந்த பயணத்தில் இறங்கினோம். கோவில்களுக்கு செல்ல விரும்பிய என் மகளுக்கு நன்றி, ஸ்ரீரங்கம், தாரசுரம், பிரகதீஸ்வரர் கோவில், ராமேஸ்வரம், கானாடுகாத்தான், தூத்துக்குடி, மதுரை போன்ற இடங்களுக்கு கடந்த ஜூன் இறுதி வாரத்தில் சென்றிருந்தேன்.

குறிப்பிட்ட சில நாட்களில் சில இடங்களுக்கு மட்டுமே செல்ல முடிந்தது. நேர்த்தியான கட்டிடக்கலை, அற்புதமான பொறியியல் வேலை மற்றும் பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள் போன்ற பல ஆட்சியாளர்களின் ஆழ்ந்த ஆன்மீக சிந்தனை உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்கிறது. மேலும் மந்திரக்கூடம், கும்பகோணம், ராமேஸ்வரம் மற்றும் காக்கா ஹோட்டல் , முருகன் மெஸ் என பல இடங்களில் உணவு அருமையாக இருந்தது.. ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 2 – 3 கிலோ அதிகரித்திருக்க வேண்டும்.. 3 மாத வெளிநாட்டு பயணம் மற்றும் உணவுக்கு பிறகு இந்த தாயகம் சுற்றுபயணம் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.” என்று குறிப்பிட்டு தமிழ் நாடு பயணம் குறித்து விவரித்துள்ளார் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி. தற்போது குடும்பத்தாருடன் ராஜமௌலி சென்றுள்ள ஆன்மீக சுற்றுலா வீடியோ தற்போது ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள் ராஜமௌலியின் கனவு திரைப்படமான மகாபாரதம் திரைப்படத்திற்காகவும் இந்த பயணம் இருக்கலாம் என்ற கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர்.