தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் பேசிய பேட்டி ஒன்றில் லேடி சூப்பர் ஸ்டார் என குறிப்பிடுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. முன்னதாக விஜய் சேதுபதி - சமந்தா ஆகியாருடன் இணைந்து தனது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல், திரில்லர் திரைப்படமான O2, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்த காட்ஃபாதர், மலையாளத்தில் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடித்த கோல்ட் மற்றும் ஹாரர் த்ரில்லர் படமான கனெக்ட் என கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் ஐந்து திரைப்படங்கள் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன.

அடுத்ததாக முதல் முறை பாலிவுட்டில் கதாநாயகியாக களமிறங்கும் நடிகை நயன்தாரா இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கும் இறைவன் திரைப்படத்திலும் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனிடையே தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த லேடி சூப்பர் ஸ்டார் எனும் பட்டம் குறித்து பிரபல நடிகை மாளவிகா மோகனன் பேசியது பல சர்ச்சைகளை கிளப்பியதோடு நயன்தாரா ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கிய நடிகை மாளவிகா மோகனன், அடுத்ததாக தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார் கடைசியாக கடந்த 2022ம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன் திரைப்படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனன், தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமான பீரியட் திரைப்படமாக 1800களில் கே ஜி எஃப்-ஐ மையப்படுத்தி நகரும் கதை களத்தைக் கொண்டு 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் தங்கலான் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக மிகுந்த கட்டுப்பாடோடு டயட் எடுத்துக் கொண்டிருக்கும் மாளவிகா மோகனன் அதிரடியான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து வருவதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

முன்னதாக மலையாளத்தில் நடிகை மாளவிகா மோகனா நடித்த கிறிஸ்டி திரைப்படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகும் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பிரபல மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ், இயக்குனர் ஆல்வின் ஹென்றி இயக்கும் இந்த கிறிஸ்டி திரைப்படத்தில் மாளவிகா மோகனுடன் இணைந்து கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் கிறிஸ்டி திரைப்படத்தின் பேட்டி ஒன்றில் பேசியபோது லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது குறித்து தனது கருத்தை மாளவிக்க மோகனன் பதிவிட்டார். “அப்போது எதற்காக பாலினத்தை குறிப்பிட்டு லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட வேண்டும் சூப்பர் ஸ்டார் என்றே சொல்லலாமே. பாலிவுட்டில் தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா கைஃப் ஆகியோரை லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடுவது இல்லையே. சூப்பர் ஸ்டார் என்று தானே சொல்கிறார்கள். ஏன் லேடி சூப்பர் ஸ்டார் என குறிப்பிட வேண்டும்” என பேசினார்.

இது நயன்தாராவை குறிப்பிட்டு பேசியதாக வலைத்தளங்களில் தவறான செய்திகள் பரவ லேடி சூப்பர் ஸ்டார் என்று கூப்பிடுவதில் உடன்பாடு இல்லை என்ற மாளவிகா மோகனனின் கருத்து சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் இதற்கு விளக்கமளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மாளவிகா மோகன் பதிலளித்துள்ளார். “பெண் நடிகர்களை குறிப்பிட்டு சொல்லும் முறையை தான் தவறு என்று நான் பதிவிட்டேனே தவிர ஒரு குறிப்பிட்ட நடிகரை பற்றி நான் பேசவில்லை. உண்மையில் நான் நயன்தாரா அவர்களை மிகவும் மதிக்கிறேன். ஒரு சீனியராக அவருடைய அற்புதமான இந்தப் பயணத்தை வியந்து பார்க்கிறேன். எனவே கொஞ்சம் அமைதியாகுங்கள். குறிப்பாக சிறிய பத்திரிக்கைகள். Only ❤ to Miss N” எனக் குறிப்பிட்டு பதிலளித்துள்ளார். நயன்தாரா குறித்து பரவும் தவறான சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்த நடிகை மாளவிகா மோகனனின் அந்த பதிவு இதோ…