தமிழ் சினிமாவின் மாபெரும் கனவு திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை இயக்கி அதை வெற்றி பெற செய்தவர் இயக்குனர் மணிரத்னம். எம் ஜி ஆர் தொடங்கி கமல் ஹாசன் மற்றும் பலர் முயற்சித்த கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மெகா பட்ஜெட் படமாக உருவாக்கி கடந்த ஆண்டு அதன் முதல் பாகத்தை வெளியிட்டு உலகம் முழுவதும் பாராட்டுகளை பெற்றார் மணிரத்தினம். சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி , திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரபு, லால், பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்த இப்படம் மக்களுக்கு பிரமாண்ட உணர்வை கொடுத்து அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. தற்போது இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஏப்ரலில் 28 ம் தேதி வெளியாகவுள்ளதால் படத்திற்கான இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா முன்பை போல் இந்த முறையும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். முன்னதாக முதல் பாகத்தின் பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இரண்டாம் பாகத்தின் பாடல்கள் குறித்த தகவல்கள் ரசிகர்களால் பரவி வந்த நிலையில் இந்தியாவின் முன்னணி பாடகி கேஎஸ் சித்ரா அவர்களிடம் மாணவி ஒருவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்த கேட்கையில் ஏ ஆர் ரஹ்மானுடன் நிறைய பாடல்களில் பணியாற்றியுள்ளேன். சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் 2 படத்தில் பாடியிருக்கிறேன் என்று தெரிவித்தார். இதனையடுத்து சித்ரா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் உற்சாகத்தில் ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

பின்னணி பாடகி சித்ரா கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் பாடி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல்கள் பாடி இதுவரை 25000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். தென்னிந்திய சினிமாவின் பெருமையாக கருதப்படும் பின்னணி பாடகி சித்ரா ரசிகர்களால் ‘சின்னகுயில்’ சித்ரா என்றழைக்கப்படுவார். அறிமுகமான காலத்திலிருந்து குரலில் எந்தவொரு சலனமும் இன்றி தெளிவாக பாடும் இவரது குரலுக்கு லட்சக் கணக்கான ரசிகர் உள்ளனர். சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தில் ‘Soul of varisu’ என்ற பாடியுள்ளார். பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.