தமிழ் திரையுலகில் காலத்தினாலும் மறக்க முடியாத திரைப்படமாகவும் தமிழ் திரையுலகின் போக்கை மாற்றிய திரைப்படமாகவும் இருந்து வருவது சுப்ரமணியபுரம். கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை எதிர்பாராத வகையில் ஆச்சர்யப்படுத்தியது. மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சுப்ரமணியபுரம் திரைப்படம் வசூல் ரீதியாவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது. படத்தின் நாயகனாக ஜெய் நடிக்க அவருக்கு ஜோடியாக சுவாதி நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இயக்குனர் சசிகுமார், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்திருந்தனர். இயக்குனர் சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய ராஜ முஹமத் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் படத்திற்கு இசையமைத்திருந்தார். இவரது இசையில் படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இன்றும் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களின் விருப்ப பட்டியிலில் இருந்து வருகிறது. குறிப்பாக படத்தில் இடம் பெற்ற ‘கண்கள் இரண்டால்’ பாடல் பட்டி தொட்டி வரை ஹிட் அடித்தது.

மதுரை நிலப்பரப்பில் ரவுடிசத்தையும் அதன் பின்னணியில் நடக்கும் அரசியலையும் வித்யாசமான அணுகுமுறையில் திரைக்கதையை நகர்த்தி இந்திய திரையுலகினரை ஆச்சர்யபட வைத்த சுப்ரமணிபுரம் திரைப்படம் இன்று தமிழ் சினிமாவின் ‘கல்ட் கிளாசிக்’ பட்டியலில் உள்ளது. இன்றும் பல திரைப்படங்களுக்கு ஊக்கமாகவும் முன்னோடியாகவும் சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படம் இருந்து வருகிறது. இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றும் ரசிகர்கள் இப்படத்தை ஸ்லாகித்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இணையத்தில் 15 years of subramaniapuram என்ற ஹேஷ்டெக்குடன் படம் குறித்து பல கருத்துகள் பரவியது.

இந்நிலையில் சுப்ரமணியபுரம் திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “மீண்டும் ஒருமுறை இந்த அனுபவத்தை உயிர்ப்பிக்க வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் தமிழகமெங்கும் ரீ-ரிலீஸ் செய்யப்படும்” என பதிவிட்டுள்ளார். இதையடுத்து சசிகுமார் அவரின் பதிவு இணையத்தில் ரசிகர்களால் கொண்டாடப் பட்டு வைரலாகி வருகிறது.