கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகை அடகு வைத்துள்ள 13.47 லட்சம் பேருக்கு நகைக்கடன் ரத்து செய்யப்படுவதாக அறிவித்த நிலையில், நகைக்கடனில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டசபை தேர்தலின் போது 'தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' என தி.மு.க. வாக்குறுதி அளித்தது.

அதன்படி ஆட்சி அமைத்ததும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடகு வைத்து பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தரவிட்டார். இதற்கிடையில் அரசின் நகைக்கடன் தள்ளுபடி சலுகையை பெற ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலர் கூட்டுறவு வங்கிகளின் வெவ்வேறு கிளைகளில் கடன் பெற்றுள்ளனர்.

மற்ற பலர் போலி நகைகளை அடகு வைத்தும் கடன் பெற்றுள்ளனர் என புகார்கள் எழுந்தன. இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள அனைத்து நகைக் கடன்களையும் ஆய்வு செய்ய கூட்டுறவுத் துறை உத்தரவிட்டது.

அதன்படி ஒரு மாவட்ட அதிகாரிகள் வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினர். அத்துடன் நகைக்கடன் தள்ளுபடி சலுகை பெறும் பயனாளிகளை தேர்வு செய்ய பல்வேறு நிபந்தனைகளையும் அரசு விதித்தது.

இதையடுத்து பயிர்க்கடன் தள்ளுபடி சலுகை பெற்றவர்கள், அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நகைக் கடன்களுக்கு தள்ளுபடி சலுகை கிடையாது என தெரிவிக்கப்பட்டது.

மேலும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எண்ணை வழங்காதவர்கள், தவறாக வழங்கியவர்கள் என மேலும் பலரும் தள்ளுபடி சலுகை பெற தகுதி இல்லாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவர் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நான்கு மாதங்களாக கூட்டுறவு வங்கிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த நகைக் கடன் ஆய்வு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதுவரை 5 சவரனுக்கு உட்பட்டு 1.25 லட்சம் ரூபாய் வரை நகைக் கடன் பெற்ற 48.85 லட்சம் நகைக் கடன்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு உள்ளன. அந்த கடன்களின் கீழ் வழங்கப்பட்ட தொகை 18 ஆயிரம் கோடி ரூபாய். அதனடிப்படையில் தள்ளுபடி சலுகை பெறும் பயனாளிகளின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் அரசு விதித்த கடும் நிபந்தனைகளால் 35.38 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி சலுகை கிடைக்காது என தெரிய வந்துள்ளது. சலுகை பெறும் பட்டியலில் 13.47 லட்சம் பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடி பெற மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் “குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக தருவதோடு நகை கடன் தள்ளுபடி சலுகை பெற மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. சரியான விவரங்களை அளித்தால் பின்னர் சரி பார்க்கப்பட்டு ஆய்வின் அடிப்படையில் கடன் தள்ளுபடி வழங்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு ஊழியர்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 5 பவுனுக்கு ஒரு கிராம் அதிகமாக நகை அடகு வைத்திருந்தாலும் அவர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.