தமிழக கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதித்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். வீடுகளில் குடும்பத்துடன் கொண்டாடுங்கள் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.

DGP SYLENDRA BABU

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும் தமிழக அரசு சில தளர்களுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

அதனைத்தொடர்ந்து  பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே 31-ம்  தேதி  இரவு தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. அதனால் அனைவரும் வீடுகளிலேயே அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாட வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

மேலும் வழிபாட்டுத்தலங்களில் தமிழக அரசினால் அறிவுறுத்தப்பட்ட கொரோனா நடத்தை வழிமுறைகளை பின்பற்றுமாறும் புத்தாண்டு தினத்தில் பொது இடங்களிலும் சாலை ஓரங்களிலும் கூட்டம் கூடுவதையும் 2 சக்கர வாகனங்களில் சுற்றுவதையும் தவிர்க்க வேண்டும். நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் 2 சக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்து ரெயிலிலும், பஸ்களிலும் பயணிக்கலாம். அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இதனால் விபத்துகளை தவிர்க்கலாம் என்றும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து அவசர தேவைகளுக்காக 4 சக்கர வாகனத்தில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் 3 மணி நேரத்துக்கு ஒரு முறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி பின்னர் பயணத்தினை தொடரலாம். ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி இரவு 11 மணி வரை செயல்படும். ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என ஓட்டல் நிர்வாகம் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டினை குறித்து தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்தால் ரோந்து காவலர்கள் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். இதனால் திருட்டு சம்பவங்கள் தவிர்க்கப்படும். பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் ரோந்து வாகன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள். கன்னியமற்ற மற்றும் அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவோர் பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100, 112 எண்களை தொடர்பு கொள்ளலாம். KAVALAN-SOS (செயலி) பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டதுள்ளது.

விபத்தில்லா புத்தாண்டாக கொண்டாட தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். அனைவருக்கும் தமிழக காவல்துறையின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.