“ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார்” என்று, அப்போலோ மருத்துவர் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு, தமிழக அரசியலில் தற்போது வரை பெரும் புயலை கிளப்பிக்கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருந்தாலும், அவர் மறைவு பற்றிய சர்ச்சைகள் இன்று வரை ஓயவில்லை.

குறிப்பாக, ஜெயலலிதாவின் மரணத்தில், இன்று வரை மர்மம் நீடித்து வருவதாகவும் கூறப்படும் செய்திகள் உலா வந்துகொண்டு தான் இருக்கின்றன.

அதாவது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு கிட்டதட்ட 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் தொடர்ச்சியாகவே, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி, முதலமைச்சராக இருந்த போதே ஜெயலலிதா உயிரிழந்தார்.

அதன் தொடர்ச்சியாகவே, ஜெயலலிதா உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக, பொது மக்கள் பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள். அதற்கு காரணம், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அவரைப் பற்றிய எந்த ஒரு ஆதரப்பூர்மான செய்திகள் கிடைக்கவில்லை என்பதும், அவர் பேசியதாக ஆடியோ வீடியோ எதுவும் வெளியாகமல் இருந்ததே முக்கிய காரணம் என்றும் கூறப்படகிறது.

இப்படியாக, தொடர்ந்து சர்ச்சைகள் வெடித்த நிலையில் தான், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தனி விசாரணை நடத்த, அப்போதைய அதிமுக தலைமையிலான தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டது.

அதன்படி, ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் என்று, இது வரை சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள், ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜராகி தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தனர்.

அத்துடன், “மருத்துவர்களை விசாரிக்கும் போது, மருத்துவ குழு வல்லுநர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும்” என்று, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த சூழலில் தான், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக விசாரணை நடைபெற முடியாத சூழல் காரணமாக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் 6 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கில் விசாரணையை, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பாக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேர் விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் டாக்டர் பாபு மனோகர் வாக்குமூலம் அளித்தார்.

அதன்படி, “கடந்த 2016 ஆம் ஆண்டு முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்கும் நாளுக்கு முன்னதாகவே தலைசுற்றல், மயக்கம் இருந்தது என்றும், தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா, ஓய்வெடுக்க மறுத்தார்” என்றும், குறிப்பிட்டார்.

அத்துடன், “சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு சில உடற்பயிற்சிகளை செய்யுமாறு பரிந்துரைத்தேன் என்றும், மருத்துவர் சிவக்குமார் அழைத்தனின் பேரில் பதவி ஏற்புக்கு முந்தைய நாள் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா நான் சந்தித்தேன்” என்றும், குறிப்பிட்டார்.

மேலும், “யாருடைய துணை இல்லாமல் நடக்க முடியாத சூழல் ஜெயலலிதாவுக்கு இருந்தது என்றும், சிறுதாவூர் அல்லது உதகை சென்று ஓய்வெடுக்குமாறு ஜெயலலிதாவிடம் பரிந்துரைத்தேன்” என்றும், அவர் கூறினார்.

“சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்க ஜெயலலிதாவுக்கு பரிந்துரைத்தேன்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

இதனால், இன்றைய தினம் விசாரணையில் அப்பல்லோ மருத்துவர்கள் நேரில் ஆஜராகி இப்படியாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.