“நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வென்றவர் அனைவரும் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும்” என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் துணை மேயர் பதவிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. இது தொடர்பான மறைமுக தேர்தல் நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர், கட்சியின் உத்தரவை மீறி சில இடங்களில் வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றிப் பெற்றனர். இதனால், திமுக கூட்டணி கட்சிகள் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், இது குறித்து திமுக தலைமைக்கு புகார் அளித்து, தங்களது வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டது.

இதனால், சற்று அதிர்ச்சியடைந்த திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், இது தொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, “குற்ற உணர்ச்சியால் குறுகி நிற்கிறேன், பதவி விலகுங்கள்” என்று, கூட்டணிக்கு எதிராக வென்ற திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். 

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது. இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

“ஆனால், அந்த மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்து உள்ளது என்றும், இந்த வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“பேரறிஞர் அண்ணா சொன்ன "கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டில்" மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று, தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள் என்றும், ஆனால் அந்தக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள்” என்றும், தனது கவலையை பதிவு செய்து உள்ளார்.

“ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால், கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன்” என்றும், தனது வேதனையை, முதல்வர் தெரிவித்து உள்ளார்.

“இதனால், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ, அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்றும், அவர் கூறியுள்ளார்.

அத்துடன், “திமுக தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என்றும், அப்படி விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள்” என்றும் கழகத் தலைவர் என்கிற முறையில் எச்சரிக்கிறேன்” என்றும், அவர் அதிரடியாக அறிவித்து உள்ளார்.

குறிப்பாக, “உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள்” என்றும், திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

மேலும், “மாவட்ட கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும்” என்றும்ம், மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இதனால், அத்து மீறலில் ஈடுபட்ட திமுகவினர் தற்போது கலகத்தில் உள்ளனர். அத்துடன், அவர்கள் பதவி விலகவும் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.