படம் ரிலீஸாகி 3 நாட்கள் கழித்து தான் விமர்சனம்... தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தீர்மானங்கள்!
By Anand S | Galatta | September 18, 2022 18:20 PM IST
இந்த ஆண்டிற்கான (2022) தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையின் தேனாம்பேட்டையில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று செப்டம்பர் 18ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்ட இந்த பொதுக்குழு கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேவையான புதிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதன் முக்கிய பகுதியாக தமிழ் திரைப்படங்களின் விமர்சனங்கள் இனிமேல் படம் ரிலீஸாகி மூன்று நாட்களுக்குப் பிறகுதான் சமூகவலைதளங்கள் வெளியிட வேண்டுமென பொதுக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த முழு அறிக்கையை பொதுக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
திரையரங்குகளில் டிக்கெட்களை சென்டர்லைஸ் சர்வர் மூலம் மானிட்ரிங் செய்து டிக்கெட் விற்பனை செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
சிறுமுதலீட்டு திரைப்படங்களை நமது சங்கத்தின் வர்த்தக அறக்கட்டளை மூலம் OTT தளத்தில் வெளியீட்டு தயாரிப்பாளர்கள் பயனடையும் வண்ணம் வழிவகை ஏற்பாடு செய்யப்படும்.
திரைப்படங்களின் விமர்சனங்களை படம் ரிலீசான தேதியிலிருந்து சமூகவலைதளங்கள் 3-நாட்கள் கழித்து எழுதுமாறு இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
திரையரங்குகளில் படம்பார்த்தபின் கருத்து கேட்பதற்காக கொண்டுவரும் கேமராக்களை திரையரங்குகளின் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என திரையரங்கு உரிமையாளர்களை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
இவை உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தீர்மானங்கள் கொண்ட அந்த அறிக்கை இதோ…