தமிழ் திரை உலகின் பிரபல பாடகரான மாணிக்க விநாயகம் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்த தில் திரைப்படத்தில் இடம்பெற்ற “கண்ணுக்குள்ள சிறுக்கி” பாடல் மூலமாக தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்தார். குறிப்பாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற “விடைகொடு” என்ற பாடலில் அனைவரையும் நெகிழ வைத்தார்.

தொடர்ந்து தூள் படத்தில் இடம்பெற்ற “கொடுவா மீசை”, திருப்பாச்சி படத்தில் “கட்டு கட்டு கீர கட்டு”, பருத்திவீரன் படத்தில் “அய்யய்யோ” என சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ள மாணிக்க விநாயகம் திருடா திருடி படத்தில் நடிகர் தனுஷின் தந்தையாக நடித்து கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து திரை உலகில் 800 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள மாணிக்க விநாயகம் 15000 பக்தி பாடல்களையும் கர்நாடக பாடல்களையும் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் காலமானார்.

சென்னையில் வசித்து வந்த மாணிக்க விநாயகம் மாரடைப்பு காரணமாக நேற்று (டிசம்பர் 26) உயிரிழந்தார். அவருக்கு வயது 78. தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் பாடகர்களில் ஒருவரான மாணிக்க விநாயகத்தின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது. மேலும் திரையுலகைச் சேர்ந்த பலரும் ரசிகர்களும்  தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.